சென்னை பிராட்வே பகுதி நடைபாதைகளிலிருந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காதவாறு அதிரடி சோதனை நடத்தி, சிசிடிவி கேமரா பதிவுகளுடன் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பிராட்வே நடைபாதை ஆக்கிரமிப்பு
சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மறைந்த ட்ராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று 2016ம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றிடம் வழங்க அவகாசம் வழங்கியிருந்தது.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தற்போது வரை நடைபாதை ஆக்கரமிப்புகள் அகற்றப்படவில்லை எனக் கூறி அதற்கான ஆதார புகைப்படங்களை சமர்ப்பித்தனர்.
சென்னை மாநகராட்சி விளக்கம்
சென்னை மாநகராட்சி தரப்பில் அக்கிரமிப்புகள் அகற்றபட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வரும் திங்கட்கிழமை முதல் அடுத்த ஞாயிற்றுகிழமை வரை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், அந்த 7 நாட்களுக்கான சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
வழக்கு தொடர்ந்து போராடிய டிராபிக் ராமசாமி இறந்த நிலையில் வழக்கின் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.