ஐபிஎல் 2026 சீசனில் எம்.எஸ்.தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்பதை சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 19-வது சீசன் இந்தாண்டு மார்ச் 28-ம் தேதி மூதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதே சமயம் இந்த தொடருக்கான போட்டி ஆட்டவணையானது இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் கூடிய விரைவில் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்றும் வீரர்கள் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், 6ஆவது கோப்பையை வெல்லும் முனைப்பில் தங்களின் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இதில் எதிர்வரும் ஐபிஎல் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிப்பாரா? தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? என்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையிலுள்ல மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்த ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்பதை உறுதி செய்தார்.
இதுகுறித்து பேசிய காசி விஸ்வநாதன், “என்னைப் பொறுத்தவரை எம்.எஸ்.தோனி இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். ஆனால் அவர் விக்கெட் கீப்பராக விளையாடுவாரா என்று கேட்டால் அதனை என்னால் உறுதிபடுத்த முடியாது. ஏனெனில் அது கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், கேப்டன் ஆகியோர் எடுக்கும் முடிவே தவிர, நிர்வாக ஊழியர்களால் எடுக்கும் முடிவு அல்ல.
எனவே அவர் இத்தொடரில் ஒரு பேட்ஸ்மேனாக விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பர் பேட்டராக விளையாடுவாரா அல்லது இம்பேக்ட் வீரராக வீரராக விளையாடுவாரா என்பதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் எம்.எஸ்.தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
அதேசமயம், தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ள காரணத்தால் சிஎஸ்கே அணியின் அனைத்து போட்டிகளும் சென்னையில் தான் நடைபெறுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்களுடைய போட்டிகளை நாங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே விளையாடுவோம். எனவே பிசிசிஐ அட்டவணையை அறிவிக்கும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே குறித்த கேள்விக்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், “இந்தியா உலகக் கோப்பையை வென்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதிலும் சிஎஸ்கே வீரர்கள் சஞ்சு மற்றும் தூபே இருவரும் சிறப்பாக செயல்பட்டது எங்களை கூடுதல் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதனால் சிஎஸ்கே அணி இந்த சீசனில் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,”நானும் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகளில் காண்கிறேன். ஆனால் இப்போதைக்கு அப்படி எந்த நியமனமும் செய்யப்படவில்லை” என்று கூறினார்.

