‘தாய் கிழவி’ திரைப்படத்தில் கிடைத்த லாபத்தை தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு பயன்படுத்த உள்ளதாக சிவகார்த்திகேயன் கூறினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கி, ராதிகா நடித்து வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், ராதிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகை ராதிகா, ”உண்மையான வெற்றியை கொண்டாட இந்த மேடையில் நிற்கிறேன். நான் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன். சில ஹீரோக்களின் படங்களில் 1,000, 1,500 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்வதை பார்த்திருக்கிறேன்.
இந்த திரைப்படத்தில் பெண்களுக்காக குறைந்த விலையில் டிக்கெட் (ரூ.150) விற்கப்பட்டு ரூ. 50 கோடி கலக்ஷென் வந்துள்ளது. இயக்குநர் சிவக்குமார் முருகேசனுக்காக இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என கமல்ஹாசன் கூறினார். இயக்குநர்கள் ஶ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு இயக்குநர் சினிமாவுக்கு வருவார்கள். அப்படிதான், சிவக்குமார் முருகேசன்.
எனது இத்தனை நாள் கலைப்பயணத்தில் இந்த படத்தின் வெற்றியை பார்த்தது பெரும் பாக்கியம். சித்தி சீரியல் வெற்றிக்குப் பிறகு இந்த படத்தில் தான் பெண்கள் கனெக்ட் ஆனதை பார்க்க முடிகிறது. நேற்று மட்டும் 6 கதைகளை கேட்டேன். எல்லாமே ‘கிழவி’ கதாபாத்திரமாக கூறுகிறார்கள். ஒரு நடிகையாக 48 ஆண்டு கால அனுபவத்தில் ஒன்றை கற்றுக் கொண்டேன். பொதுவாக, தயாரிப்பாளர்களுக்கு தொழில் குறித்த ஒரு அச்சம் இருக்கும். அந்த அச்சத்தை என் மனதில் எடுத்துக் கொள்ளமாட்டேன்.
இந்த படத்தால் சினிமாத்துறையே குழம்பிப் போய் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு போன் செய்து உண்மையாகவே வசூல் வருகிறதா? என கேட்கிறார்கள். படத்திற்கு கண்டென்ட் மட்டுமே கிங் என்பதை தாய் கிழவி நிரூபித்திருக்கிறது. சினிமா சமூதாயத்தை கெடுக்கிறதா? என்ற கேள்வி இருந்தது. ஆனால், பெண்களின் குரலை கேட்கும் இளைஞர்கள் இருக்கும் வரை சமூதாயம் சீர்கெடாது.
படத்தின் லாபத்தில் கிடைக்கும் பங்கை சம்பளமாக பெற்றுள்ளேன். தமிழ் திரையுலகிலேயே லாபத்தில் கிடைக்கும் பங்கில் சம்பளம் பெற்ற ஹீரோயின் நானாக தான் இருப்பேன். மேலும், தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கருத்துள்ள தாய் கிழவி படத்துக்கு வரிச்சலுகை கொடுக்க வேண்டும். மாமன் சீராக இதை அவர்கள் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என மறைமுகமாக தவெக தலைவர் விஜய்யை சீண்டினார்.
அதை தொடர்ந்து நடிகரும், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசுகையில், ”தாய் கிழவி திரைப்படத்திற்கு வரவேற்பும், வெற்றியையும் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி. ஒரு சூப்பர் படம் பண்ண போகிறோம் என்று எனக்கு அப்போதே தோன்றியது. இந்த படத்தை 12 முறை பார்த்துள்ளேன். என் படத்தை கூட அத்தனை முறை பார்த்ததில்லை. இந்த பயணத்தில் நிறைய கற்று கொண்டேன். எனது திரைப்படங்களிலும் இதனை கடைபிடிக்கப் போகிறேன். சேயோன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த படத்தின் லாபம் அழகான விஷயங்களுக்கு பயன்படும். என்னை சுற்றி உள்ளவர்களுக்கு பயன்படுத்த உள்ளேன்.” என்றார்.
இந்த நிகழ்வில் தனது ‘எஸ்கே புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் 10-வது படத்தின் இயக்குநர் அம்மா முத்து சூர்யாவை சிவகார்த்திகேயன் அறிமுகம் செய்தார். மேலும், தாய் கிழவி படத்தின் வெற்றியை குறித்து பேசிய போது சிவகார்த்திகேயன் தனது தந்தையை நினைத்து கண்கலங்கினார்.

