பாஜக எஸ்.சி/எஸ்.டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்த பாலச்சந்திரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது கொலை செய்தது.
உயிருக்கு அச்சுறுத்தல்
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த பாஜக எஸ்.சி/எஸ்.டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்த பாலச்சந்திருக்கு அச்சுறுத்தல் காரணமாகவே PSO எனும் காவலர் ஒருவரை பாதுகாவலராக காவல்துறையிலிருந்து போடப்பட்டது. இதனிடையே, நேற்று இரவு பாலச்சந்தர் தனது PSO பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்கெட்டிற்கு அருகிலுள்ள சாமிநாயக்கர் தெருவிற்கு சென்றுள்ளார்.
6 பேர் கொண்ட கும்பல்
பாலச்சந்தர் சாமிநாயக்கர் தெருவில் நின்றுகொண்டு அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில், இவரது பாதுகாவலர் பாலகிருஷ்ணன் அருகிலுள்ள டீ கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பாதுகாவலர் அருகில் இல்லாத நேரம் பார்த்து வந்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் பாலச்சந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடியது.
தனிப்படை பிரிவு
கொலை நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாலச்சந்திரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் ஏதும் தடயங்களை விட்டு சென்றிருக்கின்றனரா என்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். சென்னை பெருநகர ஆணையர் சங்கர் ஜிவால், 3 உதவி ஆணையர்கள் தலைமையிலான 5 தனிப்படையை அமைத்து கொலையாளிகளை விரைவில் பிடிக்க உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம்
முன் விரோதம் மற்றும் பண விவகாரம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. கொலையாளிகளில் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மற்ற 3 ரவுடிகளான பிரதீப், சகோதரர் சஞ்சய் மற்றும் கலைவாணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட பாலச்சந்தர் மீது 8 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி ஓரிரு நாட்களில் சென்னைக்கு வர உள்ள நிலையில் பாஜக பிரமுகரின் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.