பைக் பழுது பார்க்க பணம் கேட்டு சண்டை போட்ட மகன் தலையில், கிரைண்டர் கல்லை போட்டு தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (51) – திருகேதீஸ்வரி (47) தம்பதி. இவர்களுக்கு கனகராஜ் (22), பாலபாரதி என இரண்டு மகன்கள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே செந்தூர்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் பாலச்சந்திரன், மிக்சர் பொட்டலம் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
மூத்த மகன் கனகராஜ் மட்டும் படர்ந்தபுளியில் உள்ள தனது தாத்தா பாண்டி மற்றும் பாட்டி மாடத்தியம்மளுடன் வசித்து வந்துள்ளார். 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள கனகராஜ், ஆரம்பத்தில் தனது குடும்பத்துடனே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, அடிக்கடி குடும்பத்துடன் சண்டை போட்ட காரணத்தால் அவரை அங்கிருந்து படர்ந்தபுளி கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், மார்ச் 13ஆம் தேதி தனது பைக்கை சரி செய்ய வேண்டுமெனக் கூறி, பாட்டியிடம் இருந்த தங்கக் கம்மல் மற்றும் மோதிரத்தை கனகராஜ் பறித்துக் கொண்டதாக தெரிகிறது. அதனால் வருத்தத்தில் இருந்த மாடத்தியம்மாள், உடனடியாக மகன் பாலச்சந்திரனுக்கு செல்போன் மூலம் தகவலை தெரிவித்துள்ளார்.
அதனால் கோபமடைந்த பாலச்சந்திரன் கனகராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது பைக்கை சரி செய்ய ரூ.70 ஆயிரம் வேண்டும் என தெரிவித்துள்ளார். அப்போது, தன்னிடம் ரூ.2,500 தான் உள்ளது. அதனை ஜி-பே மூலம் அனுப்பி வைக்கிறேன். மீதி பணத்தை பின்னர் அனுப்புவதாக கூறிய பாலச்சந்திரன், கையிலிருந்த பணத்தை மகனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனால், கனகராஜும் தனது பாட்டியிடம் இருந்து வாங்கியை மோதிரம் மற்றும் கம்மலை திருப்பி கொடுத்துள்ளார்.
ஆனால், அடுத்த நாளே (மார்ச் 14) தனது பெற்றோருக்கு போன் செய்த கனகராஜ், “எனக்கு பைக்கை சரி பண்ணி பணம் கொடுங்கள், இல்லையென்றால் பாட்டியை கொலை செய்துவிடுவேன்” என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மாடத்தியம்மாள் போன் செய்து, கனகராஜ் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்வதாகவும், உங்கள் மகனை அழைத்துச் செல்லுங்கள் எனவும் புலம்பியுள்ளார்.
இதனால், அன்று இரவே தனது மனைவியுடன் கிளம்பிய பாலச்சந்திரன் படர்ந்தபுளி கிராமத்திற்கு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (மார்ச் 15) மாலை வரை வீடு திரும்பாத கனகராஜ் இரவு 8 மணிக்கே வந்துள்ளார். அப்போதும், பெற்றோரிடம் பணம் கேட்டு சண்டை போட்ட அவர், மீண்டும் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
இந்நிலையில், அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 12.15 மணிக்கு வந்த கனகராஜ், “பைக்கை சரி செய்ய பணம் கேட்டால் தராமல், தூங்கிக்கிட்டு இருக்கீங்களா?” என்று கூறி தந்தையை தாக்க முயன்று, கீழே தள்ளிவிட்டுள்ளார். அப்போது, “அப்பாவை ஏன் கீழே தள்ளி விட்டாய்?” என்று கேட்ட தாயையும் அவர் தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், “உன்னுடைய தொந்தரவு தாங்க முடியவில்லை. எங்களால் நிம்மதியா வாழக் கூட முடியல. நீ ஒழிந்தால் தான் எங்களுக்கு நிம்மதி” என கூறிக் கொண்டே அருகில் இருந்த கம்பை எடுத்து கனகராஜ் தலையில் அடித்துள்ளார். போதையில் இருந்த கனகராஜ் மீண்டும் தந்தையை தாக்க ஓடி வந்துள்ளார். அதனால், மேலும் கோபமடைந்த பாலச்சந்திரன், அருகிலிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து கனகராஜ் தலையில் போட்டதாக கூறப்படுகிறது.
அதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த கனகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த கனகராஜின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கனகராஜ் மீது ஏற்கனவே எட்டயபுரம் மற்றும் நாலட்டின்புதூர் காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

