மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், தனிப்படை போலீஸார் இருவரை கைது செய்தனர். தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் 14, 16 வயதுடைய இரு சிறுமிகளை தனது இருசக்கர வாகனத்தில் மதுராந்தகம் அருகே உள்ள கீழக்கண்டை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
தேவத்தூர் வழியாகச் சென்றபோது, மதுபோதையில் இருந்த மர்ம நபர்கள் இருவர் அவர்களைத் பின் தொடர்ந்துள்ளனர். இதனால், அச்சமடைந்த சிறுவன், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியபோது, அத்திவாக்கம் பகுதியில் வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில், பின்தொடர்ந்து வந்த நபர்கள் சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது, சிறுவன் தன்னுடன் வந்த 14-வயது சிறுமியை விட்டு விட்டு 16 வயது சிறுமியை மட்டும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் இருவர், காயமடைந்த 14 வயது சிறுமியை அத்திவாக்கம் ஏரிப் பகுதிக்குச் தூக்கிச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அதிகாலையில் சிறுவன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்ததாக தெரிகிறது. சிகிச்சை அளித்த மருத்துவரிடம் சிறுமி சம்பவம் குறித்த விவரங்களைக் கூறியுள்ளார்.
இதையடுத்து, மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக ஆவடி அருகே பதுங்கியிருந்த பாலாஜி (எ) காக்கா பாலாஜியை நேற்று கைது செய்தனர்.
இவர் மீது, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பாலாஜி கடந்த ஜனவரி மாதத்தில் கூடுவாஞ்சேரி மதுபான கடையில் மது அருந்த வருபவர்களிடம், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த பாலாஜி, 14 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்தில் மாரிபுத்தூர் பகுதியை சேர்ந்த தாமோதர பெருமாள் (25) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

