“இந்த வாரம் எங்காவது வெளியே போகலாம்” என்று திட்டமிடும்போதே, நண்பர்களில் சிலருக்கோ, வீட்டில் இருக்கும் யாராவது ஒருவரது முகம் மட்டும் மெல்ல வாடிவிடும். “எனக்கு கார் பயணமே பிடிக்காது, வாந்தி வரும், தலை சுற்றும், தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்” என்று அவர்கள் புலம்புவதை நாம் கட்டாயம் கேட்டிருப்போம்.
மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு உற்சாகமாகப் பயணிக்கும்போது, இவர்கள் மட்டும் கையில் ஒரு கவரையும், வாயில் ஒரு புளிப்பு மிட்டாயையும் வைத்துக்கொண்டு, “எப்போது இந்த பயணம் முடியும்?” என்று ஒவ்வொரு நிமிடத்தையும் தவம் போலக் கழிப்பார்கள்.
ஒருவேளை வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில் பயணிக்க நேர்ந்தால், அவர்களுக்கு அது ஏதோ இமயமலையை ஏறுவது போன்ற ஒரு கடினமான போராகவே இருக்கும். ஜன்னல் ஓரம் அமர்வது, கையில் எலுமிச்சம்பழத்தை நுகர்ந்து பார்ப்பது என என்னதான் வித்தைகள் செய்தாலும், சிலருக்கு அந்தப் பயணப் பயம் துளியும் குறையாது.
இந்த பிரச்சனை ‘மோஷன் சிக்னஸ்’ (Motion Sickness) என்று அழைக்கப்படுகிறது. காலங்காலமாகப் பேருந்துகளிலும், பழைய கார்களிலும் மாரடித்த இந்த பிரச்சனை, இப்போது அதிநவீனமாக வந்துள்ள எலக்ட்ரிக் கார்களில் (Electric Cars) இன்னும் ஒருபடி மேலே போய் மக்களைப் படுத்தி எடுப்பதாக புதிய ஆய்வுகள் அதிர்ச்சி தகவலைத் தருகின்றன.
எலக்ட்ரிக் கார்களின் அமைதியும், அதீத வேகமும்: பெட்ரோல், டீசல் கார்களில் பயணம் செய்யும்போது இன்ஜின் அதிரும் சத்தம் நமக்கு ஒருவிதப் பழக்கப்பட்ட உணர்வைத் தரும். ஆனால், எலக்ட்ரிக் கார்களுக்குள் நுழைந்தாலே அது ஒரு தனி உலகம் போல இருக்கும். எந்தச் சத்தமும் இல்லாமல், ஏதோ ஒரு தியான அறையில் அமர்ந்திருப்பது போன்ற அமைதி நிலவும்.
இந்த அமைதிதான் முதல் வில்லன். வண்டி எப்போது வேகம் எடுக்கிறது, எப்போது மெதுவாகிறது என்ற எந்த அறிகுறியும் இல்லாமல் சட்டென்று கார் வேகமாக செல்லும், நமது உடலால் அந்த மாற்றத்தை உடனே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இன்ஜின் சத்தம் இல்லாததால், கார் நகரப்போவதை நம் காதுகளால் உணர முடிவதில்லை, ஆனால் கண்கள் கார் நகர்வதைப் பார்க்கின்றன. இந்த முரண்பாடுதான் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
மூளைக்குள் நடக்கும் குழப்பம்: நமது உடல் சமநிலையை (Balance) பராமரிக்க மூளைக்கு மூன்று இடங்களில் இருந்து தகவல்கள் போகும். நம் கண்கள் பார்ப்பது, நம் காதுகளின் உட்பகுதி உணர்வது மற்றும் நம் தசைகள் கொடுக்கும் அழுத்தம்.
எலக்ட்ரிக் காரின் பயணத்தில், வண்டி மிக வேகமாக வேகம் எடுக்கும்போது (Instant Torque), நம் மூளைக்கு செல்லும் தகவலில் ஒரு பெரிய ‘மிஸ்-மேட்ச்’ ஏற்படுகிறது. வண்டி அசையாதது போலத் தெரிந்தாலும், வேகம் மட்டும் மின்னல் போல இருக்கும்போது மூளை குழம்பிப்போய் விடுகிறது. இந்தப் குழப்பத்தின் விளைவாகத்தான் தலைசுற்றல், குமட்டல் மற்றும் உடல் வியர்த்தல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.
ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்: ஒரு சவால்! எலக்ட்ரிக் கார்களில் ‘ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்’ (Regenerative Braking) என்ற ஒரு வசதி உண்டு. இது பேட்டரியை சேமிக்க உதவும் ஒரு சிறந்த தொழில்நுட்பம் என்றாலும், பயணிகளுக்கு இது ஒரு சோதனைதான். டிரைவர் ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்தாலே, வண்டி தானாகவே பிரேக் போட்டது போல வேகத்தைக் குறைக்கும்.
சாதாரண கார்களில் நாம் பிரேக்கை மிதித்தால் மட்டுமே வண்டி நிற்கும், ஆனால் இதில் அடிக்கடி வேகம் ஏறுவதும், தானாகவே வேகம் குறைவதுமாக இருப்பதால், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு உடல் தள்ளாட்டம் ஏற்பட்டு, வாந்தி எடுக்கும் உணர்வு அதிகமாகிறது.
குறிப்பாக 2024-ல் வெளியான ஒரு ஆய்வு, இந்த அம்சம் மோஷன் சிக்னஸை கணிசமாக அதிகரிப்பதாகக் கூறுகிறது. இந்த ஆய்வு Exploring the Effects of Regenerative Braking and the Auditory Cues for Alleviating Motion Sickness in Electric Vehicles என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
யாருக்கு பாதிப்பு அதிகம்? இந்த மோஷன் சிக்னஸ் பிரச்சனை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. குறிப்பாகப் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு அலைபேசியைப் பார்ப்பவர்கள் அல்லது புத்தகம் படிப்பவர்களுக்கு இது உடனடியாகப் பாதிப்பைத் தரும்.
பெட்ரோல் கார்களில் இருக்கும் அந்த லேசான அதிர்வுகள் கூட இல்லாமல், எலக்ட்ரிக் கார்கள் மிக மிக அமைதியாக இருப்பதால், மூளையால் காரின் நகர்வைக் கணிக்க முடியாமல் போகிறது என்கிறது NIH ஆய்வு. ஆனால், பலருக்கு எலக்ட்ரிக் காரின் இந்த அதிர்வற்ற பயணம் மிகவும் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கிறது. இது ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொறுத்தது.
தடுக்க என்ன செய்வது? உங்களுக்கு மோஷன் சிக்னஸ் பிரச்சனை இருந்தால், எலக்ட்ரிக் காரில் செல்லும்போது சில முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம். முடிந்தவரை முன் இருக்கையில் அமர்ந்து சாலையைப் பார்ப்பது நல்லது. காரின் உள்ளே நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
டிரைவரிடம் “கொஞ்சம் மெதுவாக வேகம் எடுங்கள், திடீரென பிரேக் பிடிக்காதீர்கள்” என்று முன்கூட்டியே சொல்லிவிடுவது உங்கள் வயிற்றுக்கும் மூளைக்கும் நல்லது. அலைபேசி பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, ஜன்னல் வழியாகத் தூரத்தில் இருக்கும் காட்சிகளை ரசிப்பதன் மூலம் இந்தத் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.
எதிர்காலத்தில் வரப்போகும் தானியங்கி (Self-driving) கார்களில் இந்தப் பிரச்சனை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

