சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐடி ரெய்டு
மதுரையை பூர்விகமாக கொண்டவர் அன்புச்செழியன். இவர் கடந்த 15 வருடங்களாக சினிமாவில் பிரபல பைனான்சியர் தொழில் செய்து வருகின்றார். இவர் சென்னை நுங்கப்பாக்கத்தில் வசித்து வருகின்றார். இந்நிலையில், அன்புச்செழியன் வீட்டிற்கு இன்று அதிகாலை 5 மணிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரையில் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்புச்செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், சினிமா துறையில் விநியோகத் தளராகவும் தொழில் செய்து வருகின்றார். இதேபோல், கடந்த 2020ம் ஆண்டும் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

