மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு, நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் கோய்ஷாரி உத்தரவிட்டுள்ளார்.
அதிருப்தி எம்எல்ஏக்கள்
பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று சிவசேன கட்சி எம்எல்ஏக்கள், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அதன்தொடர்ச்சியாக சுமார் 40 எம்எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி கடந்த 20ம் தேதி நள்ளிரவு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றனர். இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 16 பேர் மீதான தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக, துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் உரிய பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் உரிய விளக்கம் அளிக்க, ஜூலை 11ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனிடையே நேற்று மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் ஆணையிட்டுள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கை
மேலும், இதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ‘எங்களின் 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க கோரி ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டவிரோத நடவடிக்கை. இந்த தருணத்திற்காகத்தான் ஆளுநர் காத்திருந்தார்’ என்று கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்த சூழலில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை சிறப்பு கூட்டத்திற்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். இதில் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

