24 வயது இளம்பெண்ணிடம் ‘ஒரு செல்ஃபியுடன் நமது வாழ்க்கையை தொடங்கலாமா? என கேட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் விநாயகம் (வயது 59). இவர் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கோயம்புத்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
அவருடன் விமானத்தில் பயணித்த 24 வயது இளம்பெண் ஒருவரை உள்ளே ஏறியதிலிருந்து உற்று பார்த்து சிரித்துக்கொண்டே இருந்த செந்தில் விநாயகம், சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அந்த இளம்பெண்ணிடம் சென்று அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த பெண் அவரை தவிர்த்துவிட்டு செல்லவே, மீண்டும் விமான நிலையத்திற்குள் உடைமைகளை எடுக்கும்போதும் அவரை பார்த்துள்ளார். அங்கும் அந்த பெண்ணின் அருகில் சென்ற செந்தில் விநாயகம் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்ததாக தெரிகிறது. அதோடு நின்றுவிடாமல், அந்தப் பெண்ணிடம், ‘ஒரு செல்ஃபியோடு நமது வாழ்க்கையை தொடங்கலாமா?’ என கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், இதுகுறித்து அங்கு இருந்த விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விமான நிலையம் சென்ற போலீசார், இளம்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக புகார் பெற்றுள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் செந்தில் விநாயகத்தை காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதோடு, அவர் மீது 74 பிஎன்எஸ் என்ற சட்டப்பிரிவின் கீழ் ( பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வது) வழக்குப்பதிவு செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக இருப்பதும், தற்போது அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மருத்துவ காரணங்களுக்காக சென்னை வந்திருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து, செந்தில் விநாயகத்தை போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை எச்சரித்த நீதிபதி சொந்த பிணையில் விடுவித்தார்.
இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

