ஜிஎஸ்டி வரி உயர்ந்து விட்டதாகவும் பென்சில் ரப்பர் மற்றும் மேகி நூடுல்ஸ் ஆகியவற்றின் விலைவாசி உயர்வுக்கு நீங்கள் தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
ஜிஎஸ்டி
கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் லாட்டரி போன்றவற்றுக்கு 28% வரி விதிக்கும் முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், பள்ளிக்குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்களின் ஜிஎஸ்டி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை நோட்டு, ஸ்டேஷனரி பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாத நிலையில் பென்சில் ஷார்ப்பனர், ரப்பர், பிளேடு, கத்தி, எல்இடி விளக்குகள் மீதான ஜிஎஸ்டி வரி 18% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்முலம் நோட்டு, ஸ்டேஷனரி பொருட்கள் 25 % வரை விலை உயர வாய்ப்புள்ளது.
விலையேற்றம்
இந்நாள் வரை 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட பென்சில், ரப்பர், ஷார்ப்பனர் ஆகியவற்றின் விலை தற்போது 2 முதல் 3 ரூபாய் வரை விலை உயரம் நிலை உள்ளது. இந்நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி பொருட்களின் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தான் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை கண்டு மாணவி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு கடிதம்
உத்த பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் என்ற ஊரைச் சேர்ந்தவர் மாணவி கிரித்தி டுபே. இவர் தன் வீட்டருகே உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘வணக்கம் என் பெயர் கிரித்தி டுபே. நான் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறேன். மோடி ஜி பென்சில் மற்றும் ரப்பர் போன்றவற்றின் விலையை நீங்கள் உயர்த்தி விட்டீர்கள். நான் சாப்பிடும் மேகியின் விலையும் அதிகரித்துள்ளது. இப்போது என் அம்மா பென்சில் கேட்டால் என்னை அடிக்கிறார் நான் என்ன செய்வது. மேலும், மற்ற குழந்தைகள் என் பென்சிலை திருடுகிறார்கள்’ என அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த கடிதத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

