வாணியம்பாடி அருகே போதை மாத்திரைகளை கடத்தி, ரயில் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கோவையை சேர்ந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புனேவில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் போதை மாத்திரைகளுடன் 6 பேர் கொண்ட கும்பல் தப்பி செல்வதாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தனிப்படை போலீசார், காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயிலில் ஏறி தீவிர சோதனை செய்தனர். அப்போது, ரயிலில் சந்தேகத்திற்கிடமாக இருந்த நபர்களை பின் தொடர்ந்து சென்ற போலீசார், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 6 இளைஞர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர்கள் கோவையைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 22), பிரதாப் (வயது 20), ஹாரிஸ் (வயது 20), அஸ்வின் (வயது 21), ஆகாஷ் (வயது 22), பிரசாந்த் (வயது 22) என்பது தெரியவந்தது. மேலும், அந்த இளைஞர்கள் வெளி மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகளை எடுத்து வந்து, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் அம்பலமானது.
அதைத் தொடர்ந்து 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 1300-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

