மாமல்லபுரம் பகுதியில் கிளி ஜோசியம் பார்த்து வந்த 7 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
பச்சை கிளிகள்
காடுகள், வயல்வெளிகள், தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் இருந்து பச்சை கிளிகளை பிடித்து வந்து அவை இறக்கைகளை வெட்டி கூண்டுகளில் அடைத்து செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை சாலை மற்றும் கோவளம் கடற்கரை பகுதிகளில் கிளி ஜோசியம் பார்த்து வருகிறார்கள். இதனால் பறவைகள் துன்புறுத்தப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட வனத்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது.
வனத்துறை
இதன்பெயரில் வனச்சரக அலுவலர் ப.கல்யாண் தலைமையில், வனத்துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடற்கரை பகுதி, அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை போன்ற பகுதிகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கிளி ஜோசியம் பார்த்து வந்துள்ளனர். அவர்கள் வனத்துறையினரை அடையாளம் கண்டுகொண்ட ஜோதிடர்கள் கிளி கூண்டுடன் தப்பி ஓட முயன்றனர். அப்போது ஜோதிடர்கள் 7 பேரை மடக்கி பிடித்த வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர். பின்னர் திருப்போரூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து வனத்துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

