குவைத்தில் உள்ள விமானப்படை தளத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இத்தாலிக்கு சொந்தமான ஒரு ஆளில்லா விமானம் அழிக்கப்பட்டதாக இத்தாலி தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 17-வது நாளாக தொடரும் போரால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியே செல்லும் சரக்கு கப்பல்கள் மாற்று வழியில் செல்வதால் ஏற்றுமதி, இறக்குமதி செலவும் அதிகரித்துள்ளது. அத்துடன், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்கள், தூதரகங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உதவ கூடாது என்று மற்ற நாடுகளை ஈரான் எச்சரித்திருந்தது. குவைத்தில் உள்ள அலி அல் சேலம் விமானப்படை (Ali Al Salem airbase) தளத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இத்தாலிக்கு சொந்தமான ஒரு ஆளில்லா விமானம் அழிக்கப்பட்டதாகவும், யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் இத்தாலி ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரோமின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டோனியோ தஜானி (Antonio Tajani) கூறுகையில், “நாங்கள் யாருடனும் போரில் ஈடுபடவில்லை. இந்த வாரம் மத்திய கிழக்கில் உள்ள ஒரு இத்தாலிய தளத்தில் நடந்த இரண்டாவது தாக்குதல் இது” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்க தூதரக வசதியைக் கொண்ட பாக்தாக் விமான நிலையத்தில் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்ததாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளப்பதிவில், “அண்டை நாடுகள் அமெரிக்க படைகளை உடனே வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் உடனான போரில் அமெரிக்காவுக்கு உதவ வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பை உலக நாடுகளின் தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.
இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எந்த நாடும் உதவக் கூடாது என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த, இத்தாலி ஆளில்லா விமானத்தைத் தாக்கி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

