பல்லாவரம் தொகுதியில் வெற்றி விழா கொண்டாடும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன் என இந்திய ஜனநாயகக் கட்சியின் (ஐஜேகே) தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக, அதிமுக மட்டுமின்றி அக்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளும் பரப்புரைகளையும், பொதுக்கூட்டங்களையும் மும்முரமாக நடத்தி வருகின்றன.
அந்த வகையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியும் (ஐஜேகே) தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சிக்கு பல்லாவரம், குன்னம் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பல்லாவரம் தொகுதி ஐஜேகே வேட்பாளரான வழக்கறிஞர் வேங்கடேசனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வேட்பாளரை அறிமுகப்படுத்தி ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போதே, அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்த முதல் ஆள் நான்தான். பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றுக்காக அவரை நான் அழைத்து வந்தேன். அன்று முதல் இன்று வரை பிரதமர் மோடி உடனான எனது நட்பு அப்படியே மாறாமல் தொடர்கிறது. இரு தினங்களுக்கு முன்பு கூட கோயம்புத்தூரில் பிரதமரை நான் சந்தித்தபோது, எனது உடல்நலனில் அவர் காட்டிய அக்கறை எங்களின் ஆழமான நட்பிற்குச் சான்று.
தற்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு கிடக்கிறது. அர்த்தமற்ற வரி உயர்வால் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். ஊழல் மலிந்துள்ள இந்த ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக மக்கள் ஒரு பெரிய மாற்றத்திற்காக தவம் கிடக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த தேர்தல் மூலம் நிகழ வேண்டும். இதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது நீண்டகால நண்பர். எங்கள் ஊருக்கு மிக அருகாமையில் உள்ளவர். கல்வி வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து சிந்திப்பவர். இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்திருப்பது வெறும் வெற்றிக்காக மட்டுமல்ல; தமிழக மக்களின் விடியலுக்காக.
பல்லாவரம் தொகுதி கடந்த 50 ஆண்டுகளாக எங்களது பார்வையில் இருக்கும் தொகுதி. இங்குள்ள மக்கள் மீது எங்களுக்கு மிகுந்த அக்கறை உண்டு. இந்த அரங்கத்தில் உள்ள அனைவரையும் எனது உடன்பிறப்புகளாகவே கருதுகிறேன்.
தேர்தல் முடியும் வரை உங்கள் உழைப்பு ஓயக்கூடாது. உங்களுக்கு தெரிந்த அனைத்து தேர்தல் யுக்திகளையும் பயன்படுத்தி, இரட்டை இலை சின்னத்தின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். தொண்டர்களாகிய உங்களின் வேகத்தையும், உணர்ச்சியையும் பார்க்கும்போது வெற்றி உறுதி எனத் தெரிகிறது. இதே பல்லாவரத்தில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் நமது வெற்றி விழாவைக் கொண்டாட நான் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என பாரிவேந்தர் கூறினார்.
பின்னர் பல்லாவரம் தொகுதி வேட்பாளர் வெங்கேடசன் பேசுகையில், “இந்த மண்ணின் மைந்தன் நான். இந்திய ஜனநாயக கட்சி ஆரம்பித்த நாள் முதல் அதில் பயணித்து வருகிறேன்.சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 28 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் எனக்கு, பல்லாவரம் தொகுதி புதியது அல்ல. நான் தாம்பரம் பல்லாவரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து உள்ளேன்.
தற்போது பல்லாவரம் பகுதியிலேயே எனது இல்லத்தை மாற்றிக் கொண்டு முழுநேர மக்கள் பணியில்,தேர்தல் பணியில் ஈடுபட உள்ளேன்.
பல்லாவரம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன். மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால், தொகுதிக்குத் தேவையான திட்டங்களையும் நிதி உதவிகளையும் எளிதாக பெற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும்” என அவர் கூறினார்.

