30 கியாஸ் சிலிண்டர்களுடன் மாயமான டெலிவரி பாய் மீது சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனம் காவல் துறையில் புகார் அளித்துள்ளது.
நகை திருட்டு, பணம் திருட்டு, வாகன திருட்டு போன்ற திருட்டுகளை தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது புதிய திருட்டாக கியாஸ் சிலிண்டர் திருட்டு நிகழ்வு நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த விநோத திருட்டு சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. 30 கேஸ் சிலிண்டர்களுடன் டெலிவரி பாய் மாயமாகியிருக்கின்றார்.
ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரால் உலக நாடுகளில் எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இதன் தாக்கம் மிகப் பெரியதாக உருவெடுத்துள்ளது. மிக முக்கியமாக நாடு முழுக்க வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு தலைவிரித்தாட தொடங்கி உள்ளது.
அடுத்து வீிட்டு உபயோக சிலிண்டர் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதே இல்லத்தரசிகள் பலரின் கவலையாக உள்ளது. இதேபோல் சிலிண்டரை புக் செய்துவிட்டு, அதற்காக காத்துக் கொண்டிருப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு சிலர் மோசடி சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த வேளையில், ஆந்திராவில் கியாஸ் சிலிண்டர் திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விசாகப்பட்டினம் சின்னகந்தியாடாவைச் சேர்ந்தவர் ஒய் அப்பாராவ். இவர் கடந்த சில மாதங்களாக அதே பகுதியில் உள்ள மணிகண்டா இண்டேன் கேஸ் ஏஜென்சியில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையிலேயே கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டு சூழலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர் 30 சிலிண்டர்களுடன் மாயமாகியிருக்கின்றார். சிலிண்டரை டெலிவரி கொடுக்காமலேயே அதற்கான ஓடிபி-க்களை சூசகமாகப் பேசி பெற்றுக்கொண்ட பின்னரே இந்த திருட்டு சம்பவத்தை அவர் நிகழ்த்தியிருக்கின்றார்.
ஓடிபி-யை கூறிய பின்னரும் சிலிண்டர் வராத காரணத்தால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்கள் கியாஸ் ஏஜென்சியில் இதுகுறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர். இதன் பின்னரே அப்பாராவ் நிகழ்த்திய திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. சம்பவம் குறித்து வழக்கு பதிந்த ஆந்திரா போலீஸார் தற்போது அப்பாராவுவை தேடும் பணியில் களமிறங்கியிருக்கின்றனர்.
30 கேஸ் சிலிண்டர்களுடன் சேர்த்து அவர் ரூ. 13 ஆயிரம் ரொக்கத்தையும் தூக்கிச் சென்றிருப்பதாக கேஸ் ஏஜென்சில் தரப்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

