எதிர்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்திருப்பது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளும் கோப்பையை வெல்ல தீவிர தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் ஓர் அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் அரசு தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஐசிசி உலக டி20 2026 இல் பங்கேற்க அரசாங்கம் அனுமதிக்கும். ஆனால் பிப்ரவரி 15, 2026 அன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமிறங்காது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே, இந்த சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. கடந்த மாதம் பிசிசிஐ உத்தரவின் பேரில், ஐபிஎல் தொடரின் கேகேஆர் அணியில் இருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தஃபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மறுப்பு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்று கோரியது. இருப்பினும், இந்தக் கோரிக்கையை ஐசிசி ஏற்க மறுத்ததால், டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி விலகுவதாக அறிவித்தது. வங்கதேசத்தின் முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆதரித்திருந்தது. ஆனாலும், மற்ற நாடுகள் ஆதரிக்காததன் காரணமாக, இறுதியில் வங்கதேசம் தொடரில் இருந்து விலகியது.
இந்த சூழலில்தான், பாகிஸ்தான் அரசு தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் அறிக்கையில், “குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்பது, போட்டியின் உணர்வையும் புனிதத்தையும் பலவீனப்படுத்தும்” என்று பதிவு செய்துள்ளது.
மேலும், “அரசாங்கங்கள் எடுக்கும் முடிவுகளை ஐசிசி மதித்தாலும், பாகிஸ்தான் அரசின் இந்த முடிவானது கிரிக்கெட் விளையாட்டுக்கோ அல்லது பாகிஸ்தான் ரசிகர்களுக்கோ நல்ல செய்தி அல்ல. ஒரு குறிப்பிட்ட போட்டியில் மட்டும் பங்கேற்க மறுப்பது நியாயமில்லாதது. இது உலக கிரிக்கெட்டையே பாதிப்புக்கு உள்ளாக்கும்.
டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதே ஐசிசியின் முன்னுரிமை. இது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்பட, ஐசிசியின் அனைத்து உறுப்பினர்களின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். அனைத்து பங்குதாரர்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளது.
ஒருவேளை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

