கள்ளத் தொடர்பை தட்டிக் கேட்ட கணவரை உயிரோடு எரித்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த க.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய ராஜன் மகன் அந்தோணி ராபின் (26). இவருடைய மனைவி அம்மு (22). இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். அந்தோணி ராபின் தனியார் கியாஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், உடலில் பலத்த தீக் காயத்துடன் அந்தோணி ராபினை அவரது மனைவி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அப்போது அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறினார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அந்தோணி ராபின் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் 4 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அந்தோணி ராபின் நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து அம்மு அளித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் தற்கொலை பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்தோணி ராபின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை மனைவி அம்மு தான் கொலை செய்திருக்க வேண்டும் எனவும், அவரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி சேலத்தில் அவரின் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் அம்முவிடம் நடத்திய திடுக்கிப்பிடி விசாரணையில் அவரே தனது கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றதை ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “சென்னை கூடுவாஞ்சேரியில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தவர் அந்தோணி ராபின். அவருடைய கடையில் அம்மு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு உதவியாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு கூடுவாஞ்சேரி பகுதியிலேயே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு அந்தோணி ராபின் – அம்மு தம்பதியினர் தங்களின் குழந்தைகளுடன், கள்ளக்குறிச்சி அருகே உள்ள க.மாமனந்தல் கிராமத்திற்கு வந்து வசித்து வந்தனர்.
இதையடுத்து அந்தோணி ராபின் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கியாஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அம்முவுக்கும் அவருடைய சகோதரியின் கணவருக்கும் திருமண உறவை தாண்டிய பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி மீது சந்தேகம் கொண்ட அந்தோணி ராபின் அம்முவை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 8 தேதி வீட்டிற்கு மதுபோதையில் வந்த அந்தோணி ராபின் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அதில் ஆத்திரம் அடைந்த அம்மு வீட்டின் உள்ளே படுத்து தூங்கிய அந்தோணி ராபின் மீது பெட்ரோலை ஊற்றி அவரை எரிக்க முயற்சித்துள்ளார். இதில் சுதாரித்துக் கொண்ட அந்தோணி ராபின் வீட்டிலிருந்து வெளியேறி சாலைக்கு ஓடி வந்துள்ளார். பின்னர் அவரை பின் தொடர்ந்து வந்த அம்மு அவர் மீது தீவைத்து எரித்துள்ளார். இதில் அவர் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு அலறி துடித்தார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பொது, தனது கணவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அம்மு, கள்ளக்குறிச்சி போலீசில் தற்கொலை முயற்சி என புகார் அளித்துள்ளார். விசாரணையில் தானே தனது கணவரை தீ வைத்து எரித்ததாக அம்மு ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

