கரூர் மாவட்டம், ஜல்லிப்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது தனியார் சிமெண்ட் நிறுவனத்தின் சரக்கு ரயில் மோதியதில் காயமடைந்த 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் பரமத்தி அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து, நேற்று மாலை 6 மணி அளவில் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த கல்லூரியின் பேருந்து வெள்ளியணை வழியாக ஜல்லிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜல்லிப்பட்டி அருகே தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆளில்லா ரயில்வே கிராசிங்கை பேருந்து கடக்க முயன்றது. அப்போது, சிமெண்ட் ஆலையில் இருந்து லோடு ஏற்றி வந்த சரக்கு ரயில், அந்த பேருந்தின் பின்பக்கமாக பலமாக மோதியது.
இந்த விபத்தில், பேருந்து கடுமையாக சேதமடைந்ததுடன், பேருந்தில் பயணித்த ஓட்டுநர் உட்பட 25 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை காவல் துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டு, காயமடைந்த மாணவ, மாணவிகளை கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் உடனடியாக கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்த மாணவ, மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். அவர்களுடன் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்த விபத்து தொடர்பாக, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான ரயில்வே கிராசிங்கின் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில், தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான சரக்கு ரயிலை இயக்கிய ஓட்டுநர், ஆளில்லாத ரயில்வே கிராசிங் அருகே வந்தபோது சிக்னல் கொடுத்தபோதும் தனியார் கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் விரைவாக கடக்க முற்பட்டதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள வெள்ளியணை போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரை விரைவில் கைது செய்து, நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

