கோவிட் மற்றும் ஹிஜாப் சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் ஏற்பட்ட கஷ்டங்கள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மீண்டும் கர்நாடக பள்ளி கல்வித்துறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து ஏழு பள்ளிகளுக்கு ஈ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள 7 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும், போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி வருவதாகவும் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
“மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல்களின் அடிப்படையில், எங்கள் காவல்துறையின் குழுக்கள் சம்பவ இடத்தில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் தகவல்கள் கிடைக்கும்போது அதை உடனுக்குடன் ஊடகங்களிடம் பகிர்வோம் ” என்று பெங்களூரு நகர ஆணையர் கூறினார்.
மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்த பள்ளிகள்
டெல்லி பப்ளிக் பள்ளி, சுலகுண்டே; கோபாலன் சர்வதேச பள்ளி, மகாதேவபுரா; நியூ அகாடமி பள்ளி, மாரத்தஹள்ளி; எபினேசர் சர்வதேச பள்ளி, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி; செயின்ட் வின்சென்ட் பல்லொட்டி பள்ளி, ஹென்னூர்; மற்றும் இந்தியன் பப்ளிக் பள்ளி, கோவிந்தபுரா.
“மின்னஞ்சல் மிரட்டல்கள் பெரும்பாலும் புரளியாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம், எந்த அசம்பாவிதமும் நிகழ வாய்ப்பளிக்க மாட்டோம், ”என்று கூடுதல் போலீஸ் கமிஷனர் (பெங்களூரு கிழக்கு) டாக்டர் சுப்ரமணியேஸ்வர ராவ் கூறினார்.

