தமிழகத்தில் நடைபெற்ற ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி இடைத்தேர்தல்
தமிழகத்தில் பல்வேறு காரணங்களால், காலியாக இருந்த 510 ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் மாநகராட்சியில் 2 பதவிகளும், நகராட்சியில் 2 பதவிகளும், பேரூராட்சியில் 8 பதவிகளும் காலியாக இருந்தன. ஊரக உள்ளாட்சி பதவிகளைப் பொறுத்தவரை 498 பதவிகள் காலியாக இருந்து வந்தன.
இவற்றில், 303 இடங்களுக்கு போட்டியின்றி ஒரு மனதாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 207 இடங்களில், 26 இடங்களில் யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஒரே ஒரு இடத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 180 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்கு வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இவற்றில் கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய இடங்களில் பெரும்பாலானவற்றில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக மொத்தமாக 25 பதவிகளை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளது. 6 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பாக யாரும் போட்டியிடவில்லை. அதிமுகவில் நடக்கும் ஒற்றை தலைமை விவகாரத்தால், அதிமுக வேட்பாளர்கள் கட்சி சார்பாக இல்லாமல் சுயேச்சையாக போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

