விஜயுடன் தன்னை இணைத்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, நடிகை த்ரிஷா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தவெக தலைவர் விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்க்கு ஒன்றும் தெரியாது. அவர் அரசியல் அனுபவம் இல்லாதவர். விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். த்ரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்” என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
நயினார் நாகேந்திரனின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனிடையே, இதுகுறித்து நயினார் நாகேந்திரன் சரியான விளக்கம் அளிக்காமல் மழுப்பி வந்தார். இதுபோன்ற சூழலில், தனது பெயரை பொது வெளியில் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டாம் என நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தரப்பில் இருந்து, அவரது வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், இதுபோன்று வெறுக்கத்தக்க மற்றும் பொருத்தமற்ற கருத்து தெரிவிப்பார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல. ஒரு கட்சி சார்ந்து இருக்கவும் விரும்பவில்லை. கடந்த காலங்களில் இருந்தது போலவே, அரசியலில் எப்போதும் நடுநிலையுடன் இருக்க விரும்புகிறேன்.
இதையும் படிங்க: விஜய் குறித்த சர்ச்சை கருத்து: நயினார் நாகேந்திரன் மழுப்பல் பதில்
என்னுடைய கலையால் மட்டுமே நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன். எனவே, தொழில்ரீதியாக மட்டுமே என்னைப் பற்றி பேச வேண்டுமே தவிர, அரசியலில் என்னை பற்றி பேசுவதை நான் விரும்பவில்லை. மிக முக்கியமாக, எனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது விமர்சனம் மற்றும் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டாம். உயர் பதவியில் இருப்பவர்கள், பொது விவாதத்தில் பொறுப்பையும் சமநிலையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில், என்னுடைய பெயரைத் தொடர்புபடுத்த வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக விஜய் – த்ரிஷா தொடர்பான சர்ச்சை குறித்த கேள்விக்கு இன்று காலை பதிலளித்த நயினார் நாகேந்திரன், “நான் யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை யாருடைய மனதும், தனிப்பட்ட முறையில் புண்படக்கூடாது என்று நினைப்பவன் நான்” என மழுப்பலாக பதிலளித்திருந்தார். இந்நிலையில், த்ரிஷா தரப்பில் இருந்து இந்த கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

