சமீபத்தில் பி.எம்.பிர்லா இதய மருத்துவமனை வெளியிட்ட ‘பீட் பை பீட் 2025’ (Beat by Beat 2025) என்ற ஆய்வு அறிக்கை, இந்தியர்களின் இதய ஆரோக்கியம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை வெளிக் கொண்டு வந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள சுமார் 190 நாடுகளை கணக்கில் கொண்டால், மாரடைப்பால் ஏற்படும் மொத்த மரணங்களில் 20 சதவீத மரணங்கள் இந்தியாவில் மட்டுமே நிகழ்கின்றன. அதாவது, உலகில் இதய நோயால் இறக்கும் ஒவ்வொரு ஐந்து நபர்களில் ஒருவர் இந்தியர் என்கிறது ஆய்வு.
முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வரும் என்று கருதப்பட்ட இதய நோய்கள், இப்போது 25 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களையும் தாக்குவது தான் இதில் உள்ள மிகப்பெரிய சவால். குறிப்பாக, கிழக்கு இந்தியாவில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
அங்குள்ள 10 பெரியவர்களில் ஒருவருக்கு இதயப் பிரச்சனை இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகமான இதய நோயாளிகள் இருப்பதாகவும் தெற்காசிய நாடுகளில் இதய நோய்கள் மிக வேகமாகப் பரவி வருகின்றன என்றும் தெரிய வந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியும் வசதிகள் குறைவாக இருப்பது தான். மாரடைப்பு ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரம், அதாவது “கோல்டன் ஹவர்” (Golden Hour) எனப்படும் அந்த முக்கியமான நேரத்தில் சிகிச்சை கிடைக்காதது தான் அதிக மரணங்களுக்குக் காரணமாகிறது என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இதய நோய்க்கான புதிய காரணங்கள்: நாம் கவனிக்க வேண்டியவை! வழக்கமான காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றைத் தாண்டி, இன்றைய நவீன வாழ்க்கை முறையில் புதிய ஆபத்துகள் ஏற்பட்டுள்ளன.
சமூகத்திலிருந்து தனித்து இருப்பது அல்லது தனிமையாக உணருவது இதய நோய்க்கான வாய்ப்பை 15% அதிகரிக்கிறது. நகரங்களில் வேலை செய்யும் 72% பேர் ‘டிஜிட்டல் சோர்வால்’ பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் மொபைல் போன் பார்ப்பது, கணினித் திரையின் முன் அதிக நேரம் செலவிடுவது மற்றும் ‘வொர்க் ப்ரம் ஹோம்’ (WFH) கலாச்சாரம் ஆகியவை நம் தூக்கத்தைச் சிதைக்கின்றன.
சீரற்ற தூக்கம் நம் உடலின் இயற்கையான கடிகாரத்தை (Circadian Rhythm) மாற்றுகிறது. இது ரத்த அழுத்தத்தில் தேவையற்ற மாற்றங்களை உண்டாக்கி, இதயத் துடிப்பை சீர்குலைக்கிறது.
நாம் செய்ய வேண்டியது என்ன? இந்த ஆய்வு அறிக்கையின் முடிவில் சொல்லப்பட்டுள்ள மிக முக்கியமான விஷயம் “முன் கூட்டியே தடுப்பது” (Prevention). நோய் வந்த பிறகு மருத்துவமனைக்கு ஓடுவதை விட, வரும் முன் காப்பதே சிறந்தது.
25 வயதைக் கடந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மாரடைப்புக்கான அறிகுறிகள் (நெஞ்சு வலி, இடது கை வலி, அதிக வியர்வை) தெரிந்தால், சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக முதலுதவி சிகிச்சை கிடைக்கும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பெரிய நகரங்களில் மட்டுமே உயர்தர சிகிச்சை என்பது மாறி, சிறு நகரங்களிலும் (Tier 2 and 3 Cities) இதய சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

