ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பேட்டை வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (19). பிரபல ரவுடியான இவர் அவ்வப்போது கட்டுமான வேலைகளுக்கும் சென்று வந்துள்ளார். இவர் மீது பல காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த போது போலீசார் சுரேஷை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சுரேஷ் பிணையில் நேற்று (மார்ச் 27) வெளியே வந்தார். தொடர்ந்து, பேட்டைக்கு வந்த அவர், தனது பெற்றோரை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு, அங்குள்ள பள்ளிவாசலுக்கு எதிரே நடக்கும் கட்டுமான வேலைக்கும் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த சிலர், சுரேஷை வெளியே அழைத்து சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து, அவர்கள் தங்களிடம் இருந்த அரிவாளை எடுத்து சுரேஷை சரமாரியாக வெட்டினர்.
இதையடுத்து உயிர் தப்புவதற்காக அங்கிருந்து சுரேஷ் ஓடினார். ஆனாலும், அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டி வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சேரன்மகாதேவி சாலையில் உள்ள ஒரு பழைய கட்டடம் அருகே சென்ற அவர் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிடவே, அவரை விரட்டி வந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை போலீசார், சுரேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர், துணை ஆணையாளர் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய சூழலில், குற்றவாளிகளை பிடிக்க காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். முதற்கட்ட விசாரணையில், கொலையான சுரேஷுக்கும், பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக முன்பகை இருந்து வந்தது. இதன் காரணமாகவும், இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

