பெண்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, வரும் மே மாதம் 12-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது.
மேலும், பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து தாமாக முன் வந்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொன்முடி மீது காவல் துறை ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பி இருந்தது. தமிழகம் முழுவதும் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட 214 புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என பதில் அளிக்குமாறு காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதற்கு காவல்துறை தரப்பில், விசாரணை முழுமையாக நடத்தப்பட்டதாகவும், புகாரில் முகாந்திரம் இல்லாததால் 214 புகார்களும் முடித்து வைக்கப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்றம், தனிநபர்கள், நடுவர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த புகார் மனு, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார்களை விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, முன்னாள் அமைச்சர் பொன்முடி மார்ச் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி. சுந்தரபாண்டியன் முன்பு இன்று (மார்ச் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி நேரில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொன்முடி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு நிலுவையில் இருப்பதால் நேரில் அவர் ஆஜராகவில்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, பொன்முடி, வரும் மே மாதம் 12 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்.

