தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டுவந்த பலே திருடனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு ஆதரவு கொடுத்த திருடன் சிக்கியது எப்படி?
காவல் நிலையம் முன்பு கண்காட்சி போன்று வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அனைத்தும் திருட்டு பைக்குகளே. மதுரையில் இருந்து வண்டி பிடித்துவந்த நபர், கும்பகோணம் பகுதிகளில் சுற்றித் திரிந்து திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளார். நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்கை நோட்டமிட்டு திருடிச் சென்று, அதை குறைந்த விலைக்கு விற்று கல்லா கட்டியவருக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. நடந்தது என்ன?
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரப் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்துள்ளன. குறிப்பாக அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக்குகள் மாயமாகியுள்ளன.
இந்த நிலையில் கவித்தளம் பகுதியைச் சேர்ந்த சேரலாதன் என்பவர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காணாமல் போயுள்ளது. இது தொடர்பாக அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பின்னர், இருசக்கர வாகனங்கள் திருடுபோன பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், பல்வேறு இடங்களில் ஒரே நபர் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பைக் திருட்டில் ஈடுபட்டது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே உஷாரான கணேசனை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். 43 வயதான இவர் ஊர் விட்டு ஊர் வந்து, கும்பகோணத்தில் கைவரிசை காட்டி வந்துள்ளார். குறிப்பாக, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களையே நோட்டமிட்டு திருடியுள்ளார். திருட்டு பைக்குகளை குற்றச் செயலில் ஈடுபடும் நபர்களுக்கு எந்தவொரு ஆவணமும் இன்றி மலிவான விலைக்கு விற்றுள்ளார். அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.
அத்துடன், பல்வேறு இடங்களில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை வாகன நிறுத்தும் இடங்களில் வைத்துள்ளார். அதை அறிந்த போலீசார் கும்பகோணத்தில் மட்டும் 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அத்துடன், பைக் திருட்டில் ஈடுபட்டுவந்த கணேசன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

