மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொத்து விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, கடந்த 1988-ஆம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 4.77 ஏக்கர் நிலத்தை சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியுள்ளார். அந்த சொத்தை கடந்த 37 ஆண்டுகளாக ஶ்ரீதேவி குடும்பத்தினர் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் 2வது மனைவி, மகன் நடராஜன், மகள் சிவகாமி ஆகிய 3 பேரும் வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது எனக் கூறி செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அவரது மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், முழுமையான விசாரணைக்குப் பின்பே, சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறி போனி கபூர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து போனி கபூர் குடும்பத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது, “சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் 2வது மனைவி, மகன் நடராஜன், மகள் சிவகாமி ஆகிய 3 பேரும் வாரிசு சான்று பெற்று போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்து உள்ளனர். சொத்தின் உரிமையாளர் மயிலாப்பூரில் வசித்து வந்த நிலையில், அவரது வாரிசுகள் எனக் கூறி மூன்று பேரும் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2005ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர். முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது தன்னை சந்திரசேகரன் திருமணம் செய்து கொண்டதாக 2வது மனைவி கூறியுள்ளார். இதனால் மூவரையும் சட்டபூர்வ வாரிசுகளாக கூற முடியாது. எங்கள் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் நிராகரித்தது தவறு” என்று அந்த மனுவில் போனி கபூர் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, இறுதி விசாரணைக்காக, வழக்கை மார்ச் 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

