கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக நள்ளிரவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பரப்புரை கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கானது தற்போது சிபிஐ வசம் உள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் உட்பட பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு முறை தவெக தலைவர் விஜய்யும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் அதிகாரிகள் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததாகவும், அதற்கு விஜய் அளித்த பதில்களை எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து மீண்டும் மார்ச் 10ஆம் தேதி, அடுத்தகட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த நாளில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மற்றொரு நாளில் ஆஜராக விஜய் கோரிக்கை விடுத்ததை அடுத்து, மார்ச் 15ஆம் தேதி ஆஜராகி சிபிஐயின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
விஜயைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணைக்கு நடத்த வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், இன்று (மார்ச் 17) அவர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார். அதற்காக, நள்ளிரவில் சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
முன்னதாக, தனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது குறித்து செந்தில் பாலாஜி கூறுகையில், “மார்ச் 17ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. நேரில் ஆஜராகி உரிய பதில்களை அளிப்பேன். எதன் அடிப்படையில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.
அந்த கட்சி கூட்டத்திற்கு அனுமதி கோரி நிகழ்ச்சியை நடத்தியது. அதற்கு காவல்துறையும், கரூர் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியது. ஆனால் எனக்கு சம்மன் அளித்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

