டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 89 ரன்களையும், இஷான் கிஷன் 54 ரன்களையும், அபிஷேக் சர்மா 52 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையையும் வென்று சாதித்தது.
மேலும் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேசமயம் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார். இதனையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது எக்ஸ் பதிவில், “ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்றின் பல சிகரங்களை எட்டிய இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மூன்று முறை கோப்பையை வென்ற ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை வென்ற ஒரே அணியும் இதுதான். இது நமது கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. பல்வேறு துறைகளில் நமது இளைஞர்கள் மத்தியில் உள்ள திறமைகளின் அடையாளமாகவும் இது உள்ளது. இந்த வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும், முழு நிர்வாகமும், துணை ஊழியர்களும் எனது பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில், “சாம்பியன்கள்! ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! இந்த குறிப்பிடத்தக்க வெற்றி திறமைகள், உறுதிப்பாடு மற்றும் குழுப்பணியை பிரதிபலிக்கிறது. இத்தொடர் முழுவதும் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பியுள்ளது. வாழ்த்துகள் டீம் இந்தியா” என்று பதிவு செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதிவில், “என்ன ஒரு வெற்றி…!!உலக சாம்பியனான இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். தொடர் முழுவதும் உங்கள் செயல்திறன் மற்றும் துடிப்பான திறமை நாட்டிற்கு பெருமையையும் சேர்த்துள்ளது. ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியதற்காக முழு அணிக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்,
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது பதிவில்,”மீண்டும் ஒருமுறை இந்தியா சாம்பியனானது. தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுகள் சொந்த மண்ணில் கோப்பையை தக்கவைத்து, மக்கள் கொண்டாட மற்றொரு மறக்க முடியாத தருணத்தை வழங்கிய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்தியஅணிக்கு வாழ்த்துக்கள். கடந்த மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன், அதிகாரத்துடனும், நிதானத்துடனும் பேட்டிங் செய்ததையும், மிக முக்கியமான நேரங்களில் சிறப்பாக செயல்பட்டதையும் பார்ப்பது உற்சாகமாக இருந்தது. தொடர் முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை ஒரு மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்ற அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள நமது கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவு செய்துள்ளார். மேலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களும் தங்களின் வாழ்த்து செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “அகமதாபாத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மைதானத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக T20 உலகக் கோப்பையை வென்று இந்தியாவின் மகத்தான சாதனையை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பதித்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! உறுதியான முயற்சி, ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்திய இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் பெருமையும் மகிழ்ச்சியும் ஊட்டியுள்ளது.இந்த மகத்தான வெற்றி இந்திய இளைஞர்களுக்கு புதிய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. இதே உற்சாகத்துடன் எதிர்காலத்திலும் பல வெற்றிகளை குவித்து நம் பாரத நாட்டின் பெருமையை மேலும் உயர்த்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்! ” எனத் தெரிவித்துள்ளார்.

