சிலர் காரணமே இல்லையென்றாலும் அடிக்கடி மொபைல் பார்ப்பார்கள். நோட்டிஃபிகேஷனே வரவில்லையென்றாலும், மொபைல் பார்த்து அதை ஸ்க்ரோல் செய்வது இன்று பலருக்கும் பழக்கமாகிவிட்டது. இப்போது இந்த செய்தியைகூட நீங்கள் அப்படி ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கலாம்.
ஆனால் இப்படி அடிக்கடி மொபைலை சரிபார்ப்பதும், ஸ்க்ரோல் செய்வதும் உங்கள் கவனத்தை சீர்குலைத்து, உங்கள் மூளையை சோர்வடைய செய்யும் என்கிறார்கள் மருத்துவர்கள். கவனச்சிதறல் பிரச்சனை இருப்பவர்களுக்கே இந்தப் பழக்கம் அதிகம் இருக்குமாம்.
இன்றைய தேதியில் மொபைல் என்பது இன்றியமையாததாகிவிட்டது. அதனால் அதை தவிர்க்கவும் முடியாது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான். ஆனால் எது அளவு என்பதை உணர்ந்து செயல்படுவது அவசியம். சராசரியாக ஒருவர் ஒரு நாளில் 50 – 100 முறையாவது தங்கள் மொபைலை சரிபார்ப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 50 – 80 முறை வரை மொபைலை சரிபார்ப்பது நல்லதுதான். ஆனால் அதற்கு மேலாவது பிரச்சனைதான். குறிப்பாக 100 முறைக்கு மேலாக மொபைலை சரிபார்ப்பது, கவனச்சிதறலை ஏற்படுத்தக்கூடுமாம்.
அதெப்படிங்க இத்தனை முறை மொபைல் பார்த்தேன் என எண்ண முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். சாத்தியமில்லைதான். ஆனால் தேவையற்ற நேரங்களில் மொபைலை எடுப்பதை நம்மால் தவிர்க்க முடியும். உதாரணமாக படிக்கும்போதோ, வேலை செய்யும்போதோ, மீட்டிங்கில் இருக்கும்போதோ, உரையாடல்களின் போதோ மொபைலை எடுக்காதீர்கள். மாறாக முக்கியமான அழைப்புகள் வரும்போது, செய்திகள் சரிபார்ப்பதற்கு என்று இருங்கள்.
என்னதான் மொபைலை தவிர்த்தாலும், சில நேரம் கையில் எடுத்துவிட்டால் அதை பயன்படுத்தும் நேரம் கூடிக்கொண்டே போகிறது என்பவர்கள், பயன்படுத்தும் நேரத்திற்கு கட்டுப்பாடு வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் வரை மட்டுமே மொபைலை பயன்படுத்த வேண்டும் என்ற முடிவோடு பயன்படுத்துங்கள்.
இதேபோல எத்தனை மணி நேரத்துக்கு மொபைலை பார்ப்பது என்பதிலும் கவனம் செலுத்தி வரலாம். உதாரணமாக 3 – 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே மொபைல் பார்ப்பேன் என்று உங்களுக்கு ஏற்றபடி நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.
எப்போதும் மல்டி-டாஸ்கிங் செய்யாமல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் பாருங்கள். 20 முதல் 50 நிமிடங்கள் வரை ஒரு வேலையை செய்வது, அந்த நேரத்தில் மொபைல் பார்ப்பதில்லை என்று இருங்கள்.
சாப்பிடும்போது மொபைல் பார்க்காமல், உணவில் மனதை செலுத்தி சாப்பிடுங்கள். போலவே காலை கண்விழித்தவுடன் மொபைல் பார்க்கும் பழக்கத்தை கைவிடுங்கள். அதேபோல் இரவு படுக்கைக்கு சென்றபின் மொபைல் பார்க்காதீர்கள்.
மேற்குறிப்பிட்ட பழக்கங்களேவும், உங்கள் மொபைல் பயன்பாட்டை பெரியளவில் குறைக்கும். இதனால் கவனம் மேம்படுவதுடன், கண் ஆரோக்கியம் பராமரிக்கப்படுவது, மனநிலை மாற்றங்கள் மேம்படுவது, நிம்மதியான உறக்கம் கிடைப்பது என எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்!

