நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் 275 கோடி ரூபாய் மதுவிற்பனை என தகவல் வெளியாகியிருக்கிறது.
அரசு விடுமுறை
தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த பார்களும் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும். அதுவே வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை போன்ற நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில், நேற்று சுதந்திர தினம் என்பதால் வழக்கம் போல் மதுக்கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து இருந்தது. மது கடைகளுக்கு விடுமுறை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

275 கோடி வசூல்
திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை அதிகாலை தேவைக்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் மது வகைகளை வாங்கிக் குவித்தனர் தமிழக குடிகாரர்கள். இதனால் தமிழகம் முழுவதும் ஞாற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைகட்டியது. ஞாற்றுக்கிழமை மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் சுமார் 275 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானகள் விற்பனையாகி உள்ளன. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள மது கடைகளில் மட்டும் சுமார் 58 கோடியே 26 லட்சம் ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனையாகி தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது கடந்த புது வருடப்பிறப்புக்கு விற்பனையானதை விட அதிமாகும்.

மதுரை முதல் இடம்
மதுரைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சென்னை மாவட்டத்தில் 56 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. மூன்றாவதாக சேலத்தில் 54 கோடி ரூபாய்க்கும் கடைசி இடமாக 4வது இடத்தில் கோவை மாவட்டத்தில் 52 கோடியே 29 லட்சம் ரூபாய்க்கும் மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன என டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

