போக்குவரத்து காவலரை தாக்கிய நபர்களை சி.சி.டி.வி காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
காவலரை தாக்கிய இளைஞர்கள்
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர் சேகர். இவர் அங்குள்ள காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்பொழுது தவறான வழியில் வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த இளைஞர்கள் காவலர் சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் திடீரென கற்கள் மற்றும் கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த காவலரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிவகாஞ்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தாக்குதல் நடத்திய இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

