நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் திமுக அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்
நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் திமுக அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவில், ‘நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் கடந்த மாதம் மத்திய அரசு எழுப்பிய சந்தேகங்கள் குறித்து திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் மூடி மறைத்தது பொதுமக்களிடம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதிலளித்த பிறகே இதுகுறித்து வெளியில் தெரிய வந்திருப்பதால், நீட் விவகாரத்தில்அதிமுக அரசைப் போல திமுக அரசும் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ என்ற சந்தேக கேள்வி எழும்புகிறது. இதன் பிறகும் கூட திமுக அரசு இந்த பிரச்னையைப் பூசி மெழுகதான் முயற்சிக்கிறதே தவிர, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை’. ‘ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம்’ என்று தேர்தல் நேரத்தில் திமுகவினர் செய்த தில்லுமுல்லு சத்தியம் அவர்களுக்கு வேண்டுமானால் மறந்து போயிருக்கலாம், தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை’ என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

