ராஜஸ்தான் மாநிலத்தில் தையல் கடைக்காரர் தலை துண்டித்து கொலை. கொலையாளிகளுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்ப்புள்ளதா என தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
தையல் கடைக்காரர் கொலை
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் நகரில் உள்ள மால்தஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் அத்துமீறி நுழைந்த 2 பேர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும், பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கைது, விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கவுஸ் முகமது, ரியாஸ் அன்சாரி ஆகிய இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், நபிகள் நாயகம் குறித்து தவறாக கருத்து தெரிவித்த பாஜகவை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கன்னையா லால் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் அவரை படுகொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

கல் வீசி,போராட்டங்கள்
இந்நிலையில், தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து உதய்பூர் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் வன்முறை சம்பவங்களும், கலவரமும் ஏற்பட்டுள்ளது. மாநில முழுவதும் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீசார் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது.

தீவிரவாத அமைப்புடன் தொடர்பா !
மேலும், விசாரணையில் கொலையில் கைது செய்யப்பட்ட இளைஞரில் ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று வந்தவர் என்பது தெரிய வந்ததது. மேலும், அவருக்கு பாகிஸ்தானியில் உள்ள ‘தாவட் இ இஸ்லாம்’ என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் ராஜஸ்தான் மாநில காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். உதய்பூரில் கன்னையா லால் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குற்றவாளிகளிடம் வேறு அமைப்புகள் அல்லது சர்வதேச தொடர்புகள் குறித்து விரிவாக விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் கலவரம் தொடர்பாக 144 தடை உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


