அதிமுக கட்சியில் பல வருடங்களாக நடந்துவரும் பிரச்சனைகளில் தீர்க்கமுடியாத ஒன்றாக இருப்பது கட்சியின் தலைமை யார் என்பதுதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் தொடங்கிய இந்த குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை.
கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களால் கூட கட்சியை இன்னும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. ஓபிஎஸ் போன்ற கட்சியின் முக்கிய தலைவர்கள் எப்போது யாருடன் கூட்டணி அமைத்து தன்னை கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து இறக்குவார்கள் என்ற அச்சத்தோடுதான் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இரட்டை தலைமை
சசிகலாவின் அதிரடிகள் பெருகி வரும்நிலையில், இரட்டை தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் அதிருப்தி நீங்கவே இல்லை. தேனி கூட்டத்தை போலவே, சசிகலாவுக்கு ஆதரவான தீர்மானங்களை பல மாவட்டங்களில் ஓபிஎஸ் நிறைவேற்ற சொன்னதாக செய்திகள் வெளியாகின்றன.
ஓபிஎஸ் -சின் அச்சம்
தன்னை வழக்கம்போல் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டி விடுவாரோ, அதனால்தான் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற பேச்சை அவராகவே கட்சிக்குள் கிளப்பி விட்டு வருகிறாரோ? என்று ஓபிஎஸ் தரப்புக்கு சந்தேகம் உள்ளது. ஆனால், சசிகலா பக்கம் சாய்வது போலவே ஏதாவது ஒரு திகிலை கிளப்பி, தன் காரியங்களை ஓபிஎஸ் சாதித்து கொள்வதாக எடப்பாடி தரப்புக்கு சந்தேகம் உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு ட்விஸ்ட் சசிகலா தரப்பில் நடந்துள்ளது. போயஸ் கார்டனில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் சமையல் பணியாளராக நீண்ட காலம் பணிபுரிந்தவர் ராஜம்மாள். உடல்நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், கடந்த வாரம் இயற்கை எய்தினார்.
ராஜம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மருத்துவமனைக்கு சென்றார் சசிகலா.
அவர் செல்கிறார் என்பதை அறிந்த ஓபிஎஸ், தனது இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பை மருத்துவமனைக்கு அனுப்பி சசிகலாவை சந்திக்க வைத்துள்ளார். அதனால் சசிகலா வருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே மருத்துவமனைக்கு வந்து காத்திருந்தார் பிரதீப். சசி வந்ததும் அவருடன் இணைந்து ராஜம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு சசிகலாவும் ஓபிஎஸ் மகனும் 20 நிமிடங்கள் தனியாக பேசினர்.

அதேபோல தனது மூத்த மகன் ரவீந்திரநாத் எம்.பி.யை மத்திய மோடி அரசோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளச் சொல்லி டெல்லியில் ஒரு லாபியை உருவாக்கி வைக்கிறார் ஓபிஎஸ். மற்றொரு புறம், இளைய மகன் பிரதீப்பை சசிகலாவின் தொடர்பில் இருக்க காய்களை நகர்த்தியிருக்கிறார். ஆக, எடப்பாடிக்கு எதிரான அத்தனை விசயங்களையும் ரகசியமாக பராமரிக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள் விபரம் அறிந்த அதிமுகவினர். இதெல்லாம் தெரிந்தால் எடப்பாடி எப்படி ரியாக்ட் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிமுக -வினரிடம் கூடி உள்ளது.

