தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 27 வருட மணவாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். சங்கீதா ஒரு லண்டன் வாழ் தமிழ் பெண்மணி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து, பின்னாளில் அவருடைய வாழ்க்கைத்துணையாக மாறியவர். இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை ஒரு சினிமா கதை போலவே சுவாரசியமானது.
சங்கீதா லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய தந்தை சொர்ணலிங்கம் லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர். 1996-ம் ஆண்டு ‘பூவே உனக்காக’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த நேரம். அப்போது விஜய்யைப் பாராட்டுவதற்காக லண்டனில் இருந்து சென்னை வந்திருந்தார் சங்கீதா. படப்பிடிப்பு தளத்தில் விஜய்யைச் சந்தித்த சங்கீதா, தன்னை ஒரு ரசிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
சங்கீதாவின் குணாதிசயங்கள் விஜய்யின் பெற்றோருக்குப் பிடித்துப் போகவே, இருவீட்டார் சம்மதத்துடன் ஆகஸ்ட் 25, 1999 அன்று இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் சஞ்சய், கனடாவில் திரைப்படத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பெண் குழந்தையான திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார்.
விஜய் ஒரு சூப்பர் ஸ்டாராக வளர்ந்ததில் சங்கீதாவிற்கு முக்கிய பங்கு உண்டு. ஆரம்பகாலங்களில் விஜய்யின் பல படங்களுக்கு சங்கீதா ஆடை வடிவமைப்பில் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாத சங்கீதா, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையையும் குழந்தைகளையும் மிகச்சிறப்பாக கவனித்து வந்தார்.
விவாகரத்து மனுவில், “நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தார். அதனை கண்டுபிடித்த பிறகு விஜயால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். விஜய் நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டது. 2021ம் ஆண்டு ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்ந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சங்கீதா தனது விவகாரத்து மனுவில், “நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
கடந்த 5 ஆண்டுகளாக மனதளவில் அவர் என்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளானேன். அந்த உறவை முறித்துக்கொள்வதாக கூறினார். ஆனால் அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லை. திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார். விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை நடிகை பகிர்ந்ததால் குடும்பத்திற்கு அவமானம்.
சம்பந்தப்பட்ட நடிகையோடு விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார். வெளிநாடுகளுக்கு சென்றதை நடிகையே பகிர்ந்தார். பொது வெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. கணவரிடம் ஏதேனும் அழுத்தம் வந்தால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன். விஜய்யின் நடத்தை குழந்தைகளுக்கு அவமானம் ஏற்பட்டது. என்னை தொடர்ந்து அலட்சியப்படுத்தியதால் தனித்து வாழ்ந்து வருகிறேன்” என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதற்கிடையே கடந்த பிப். 24ம் தேதி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த இந்த விவாகரத்து மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

