ஜனநாயகன் பட வெளியீட்டை டெல்லியில் உள்ளவர்கள் தடுக்கிறார்கள் என ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுவென நடைபெற்று வரும் சூழலில், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவில் வடசென்னை மாவட்டம் சார்பில் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுறா வேலு தலைமை, ஆர்.கே.நகர் தொகுதி பொறுப்பாளர் மரியா வில்சன் ஆகியவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தேர்தல் மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நாஞ்சில் சம்பத், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய மரியா வில்சன், “கடந்த 8 நாட்களாக ஆர்.கே நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல விஷயங்களை பார்த்துள்ளேன். மக்களிடமும் பேசியுள்ளேன். 50 ஆண்டுகளாகவும், அதற்கு மேலாகவும் பல துரோகங்கள் இழைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே நகர் மக்களுக்கு நிறைய கொடுக்க வேண்டியுள்ளது. இப்பகுதியில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவர் என அனைவரும் வரும் 15 ஆண்டுகளில் வர வேண்டும். இங்கு பெருவாரியாக குழந்தைகளுடன் வசிக்கும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள். 25 இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா கூறியதாவது, ”அண்ணா நகருக்கும், ஆர்.கே நகருக்கும் வித்தியாசம் உள்ளது. வடசென்னை ஏழ்மை சூழ்நிலையிலேயே உள்ளது. மற்ற தொகுதிகள் போல வளர்ந்த தொகுதியாக இப்பகுதி மாறவில்லை. திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, ஆளுங்கட்சியான அதிமுகவை வீழ்த்தவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான போராட்டங்களையும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுடன் இருந்து செய்துள்ளேன். அதனால் திமுக என்ன மாறியான செயல்பாடுகளை செய்யும் என்பதை அறிவேன்.
மேலும் எம்.ஜி.ஆர் கட்சியை தொடங்கியபோது, அவருக்கு இருந்த ஆதரவை விட நமது தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்தபோது ஆதரவு அதிகம் உள்ளது. பாஜகவும், அதிமுகவும் நாம் கூட்டணிக்கு வருவோம் என்று எதிர்பார்த்து இருந்தனர், நாம் கூட்டணியில் இணைவோம் என்று கூறிக் கொண்டிருந்தனர். நாம் கூட்டணியில் சேர மாட்டோம் தனித்துப் போட்டியிடுவோம் என்று நமது தலைவர் அறிவித்தார். அதற்குப் பின்புதான் அதிமுகவும், பாஜகவும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கினர். அதில் கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்தை வைத்து தவறாகப் பிரச்சாரம் பேசி வருகிறார்கள்.
கடந்த 6 மாதங்களாக எவ்வளவு வேதனையில் இருந்தோம் என்று உங்களுக்கு தெரியும். ஜனநாயகப் படத்தை வெளியிடமால் செய்ய டெல்லியில் உள்ளவர்கள் தடுக்கிறார்கள். எத்தனை கூட்டணி கட்சிகள் வந்தாலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று வெற்றி பெறும்” என பேசினார்.

