நமது ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவு மற்றும் உடற்பயிற்சியில் மட்டும் அடங்கியிருக்கவில்லை, நாம் ஒவ்வொரு நொடியும் சுவாசிக்கும் காற்றிலும் அது கலந்திருக்கிறது. பொதுவாக காற்று மாசு என்றால் நுரையீரல் பாதிப்பு அல்லது மூச்சுத் திணறல் மட்டுமே நம் நினைவுக்கு வரும்.
ஆனால், நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நச்சுத் துகள்கள், நம் மூளையின் செயல்பாட்டையே முடக்கி, ‘அல்சைமர்’ (Alzheimer’s) எனப்படும் தீவிர மறதி நோயை உருவாக்கும் காரணியாக மாறுவது தற்போதைய ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் மனித ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு மிக நெருக்கமானது. குறிப்பாக, முதியவர்களின் நரம்பியல் ஆரோக்கியத்தில் காற்று மாசு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த ஆபத்தை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் (Emory University) ஒரு ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
எமோரி பல்கலைக்கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு: எமோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த யான்லிங் டெங் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், நீண்ட காலமாக காற்று மாசடைந்த சூழலில் வாழ்வது அல்சைமர் நோய் ஏற்படும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்து விரிவான ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வின் முடிவுகள் 2026, பிப்ரவரி 17 அன்று ‘பி.எல்.ஓ.எஸ் மெடிசின்’ (PLOS Medicine) என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அல்சைமர்: மறதி நோய் அல்லது டிமென்ஷியா (Dementia) வகைகளில் மிகவும் பொதுவானது அல்சைமர் நோய். உலகம் முழுவதும் தற்போது சுமார் 5.7 கோடி மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம், பக்கவாதம் அல்லது மன அழுத்தம் இருந்தால் அவர்களுக்கு அல்சைமர் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறி வந்தனர்.
ஆனால், “காற்று மாசு நேரடியாக மூளையைப் பாதிக்கிறதா? அல்லது முதலில் ரத்த அழுத்தம் போன்ற நோய்களை உருவாக்கி, அதன் பிறகு அவை அல்சைமருக்கு வழிவகுக்கின்றனவா?” என்ற கேள்வி ஆராய்ச்சியாளர்களிடம் நீண்ட காலமாக இருந்தது. தற்போது இந்த ஆய்வின் மூலம் அதற்கான தெளிவான விடை கிடைத்துள்ளது.
இந்த ஆய்விற்காக, 65 வயதுக்கு மேற்பட்ட சுமார் 2.78 கோடி அமெரிக்க முதியவர்களின் தரவுகள் 2000-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஆய்வு செய்யப்பட்டன. காற்றில் உள்ள மிக நுண்ணிய துகள்களுக்கும் (Fine Particulate Air Pollution), அல்சைமர் நோய் பாதிப்பிற்கும் இடையிலான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
அதில், காற்றில் மாசு அதிகமாக உள்ள பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஏற்கனவே பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு, காற்று மாசுவினால் ஏற்படும் மூளைப் பாதிப்பு மற்றவர்களை விட மிகத் தீவிரமாக இருக்கிறது. ரத்த அழுத்தம் அல்லது மன அழுத்தம் போன்ற காரணிகளை விட, காற்று மாசு நேரடியாகவே மூளையை பாதிக்கும் திறனை கொண்டுள்ளது.
மூளை ஏன் பாதிக்கப்படுகிறது? நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள நுண்ணிய நச்சு துகள்கள், நுரையீரலில் இருந்து ரத்த ஓட்டத்தில் கலந்து நேரடியாக மூளையை சென்றடைகின்றன. இவை மூளையில் வீக்கத்தை உண்டாக்கி, நரம்பு மண்டலத்தை செயலிழக்க செய்கின்றன. குறிப்பாக, ரத்த் குழாய்களில் பாதிப்பு உள்ளவர்களுக்கு (பக்கவாதம் வந்தவர்கள் போல), இந்த நச்சுக்கள் மூளையை சிதைக்கும் வேகம் இருமடங்காகிறது.
இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றால், நாம் வாழும் சூழலையும் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக முதியவர்கள் அதிக வாகன நெரிசல் உள்ள பகுதிகள் அல்லது தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் வசிப்பதைத் தவிர்ப்பது நல்லது.அரசுகளும் நிர்வாகமும் காற்றின் தரத்தை மேம்படுத்தும் போது, அது இதய நோய்களை மட்டுமல்லாமல், மனிதனின் அறிவுத்திறன் மற்றும் நினைவாற்றலையும் பாதுகாக்கிறது.

