மூளைச்சாவு அடைந்த 80 வயது முதியவரின் உடல் உறுப்புகள் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் தானம் செய்யப்பட்ட நிலையில் மூன்று பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுக்காவிற்கு உட்பட்ட விளங்கி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கோபால் (80). கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி காலை 7.30 மணியளவில் சாலையில் நடந்துச் சென்ற போது அவ்வழியே வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, கோபாலின் குடும்பத்தினரை வரவழைத்து அவரது உடல் உறுப்புகளைத் தானம் பெறுவது குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.
அதற்கு கோபாலின் குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, கோபாலின் இரு சிறுநீரங்களை அறுவை சிகிச்சை மூலம் எடுத்த மருத்துவர்கள், பிரத்யேக அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையினரின் உதவியுடன் விரைவாக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அவரது தோலும் தானமாக பெறப்பட்டது.
பின்னர் கோபாலின் உடலுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பூவதி தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள் அரசு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோபாலின் குடும்பத்தினர் அவரது உடலை கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர். இந்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
கோபாலின் உடல் உறுப்புகள் மூலம் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக கூறும் மருத்துவர்கள், உடல் உறுப்புகளைத் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தனர்.

