எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாரமுல்லா மாவட்டத்தில் (Baramulla District) உள்ள உரி (Uri) பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி இந்திய ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை இந்திய ராணுவம் இன்று (மார்ச் 15) தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஏகே ரைபிள் மற்றும் பிஸ்டல்கள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய ராணுவம் கூறுகையில், “புச்சாரில் (Buchhar) பயங்கரவாதி ஊடுருவல் முயற்சி குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உளவுத் தகவல்களை உரி எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு வழங்கியது” எனத் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மார்ச் 14- 15- க்கு இடைப்பட்ட இரவில் உரி பகுதியில் இந்திய ராணுவமும், காவல்துறையும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ வீரர்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்கரவாதியின் நடமாட்டத்தைக் கண்டறிந்தனர். அப்போது அவர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதற்கு ராணுவத்தினர் கொடுத்த பதிலடியில் அவர் கொல்லப்பட்டார்.
கடந்த மார்ச் 10- ஆம் தேதி ரஜோரி மாவட்டத்தில் (Rajouri District) நவ்ஷேராவில் (Nowshera) உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை இந்திய ராணுவத்தினர் சுட்டுச் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனிடையே, இந்திய ராணுவத்தினர் அப்பகுதியில் மீண்டும் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லையில் உள்ள பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவுதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆங்காங்கே சாலையில் பனிக்கட்டிகள் மூடியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.

