தமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை இன்னமும் நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் இன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.
சிந்தாதிரிப்பேட்டை சந்திப்பில் இருந்து எழும்பூர் எல்ஜி தோட்டம் சாலை வரையில் ஆயிரக்கணக்கான அண்ணா தொழிற்சங்க பேரவை டாஸ்மாக் பிரிவு பணியாளர்கள் பேரணியாக வந்தனர். இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
அதிமுக ஆட்சிக்காலத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டாஸ்மாக் நிறுவனம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. அதன் மூலம் 37 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சி காலத்தில் 50,000 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் பெற்று தந்தாலும் கூட அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்தினால் டாஸ்மாக் ஊழியர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.
500 மதுக்கடைகளை மூடிவிட்டு வீதிக்கு வீதி மனமகிழ் மன்றங்களை திறந்துவிட்டு திமுகவினர் கொள்ளை லாபத்தை சம்பாதித்து வருகின்றனர். திமுக ஆட்சி முடிவதற்கு 2 மாதங்களே உள்ளன. எப்பொழுது திமுக ஆட்சி முடிவுக்கு வருமோ? என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசுகையில், ”அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நிறுவனம் என்பதால் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் 37 ஆயிரம் பணியாளர்களாக இருந்த டாஸ்மாக் நிறுவனத்தில் தற்போது 25 ஆயிரத்துக்கும் குறைவான பணியாளர்களே பணியில் உள்ளனர். அவர்கள் பணிச்சுமையால் தவித்து வருகின்றனர்.” என்று பேசினார்.
இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும், திமுக அரசு நிறைவேற்றாததால் தமிழகமே தற்போது போராட்ட களமாக மாறி இருக்கிறது.
காலி பாட்டில்களை வாங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தினாலும், காலி பாட்டில்களை வாங்குவதற்கு தேவையான உள்கட்ட அமைப்பு வசதிகளை திமுக அரசு ஏற்படுத்தி தரவில்லை. காலி பாட்டில்களை வாங்குவதன் மூலம் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு உடல் சார்ந்த பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்” என்று கூறினார்.

