16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நெல்லை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கலைச்செல்வன் (34). 2016-ல் காவல்துறையில் சேர்ந்த இவர், நெல்லை மாநகர கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு ஆனந்த கலைச்செல்வன், 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால், தொடர்ந்து உடல் சோர்வு அடைந்த சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்ததால், சந்தேகமடைந்த அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தனர்.
அப்போது, சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது, காவலர் ஆனந்த கலைச்செல்வன் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, ஆனந்த கலைச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். அதன் எதிரொலியாக அவர் காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்து நீதிபதி சுரேஷ்குமார் குற்றத்தை உறுதி செய்து, சம்பந்தப்பட்ட ஆனந்த கலைச்செல்வனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 12,500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் உஷா வாதிட்டார்.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்ட ஒழுங்கு இல்லை என எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவலரே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

