புரதச்சத்து குறைபாட்டிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ‘விலை’ என்பது ஒரு முக்கியமான தடையாக உருவெடுத்துள்ளது என்கிறது ஆய்வு.
இன்றைய நவீன உலகில் சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக நாம் கருதினாலும், இந்தியாவின் நகர்ப்புறங்களில் பெரிய ஊட்டச்சத்து நெருக்கடி அமைதியாக உருவெடுத்து வருகிறது. சமீபத்தில் ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ (LocalCircles) மற்றும் ‘கண்ட்ரி டிலைட்’ (Country Delight) இணைந்து நடத்திய ஒரு விரிவான ஆய்வில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
இந்திய நகர்ப்புற மக்களில் 60 சதவீதம் பேர் தங்களுக்கு தேவையான தினசரி புரதச்சத்தை பெறுவதில்லை என்பது இந்த ஆய்வின் முக்கிய முடிவாகும். உடலின் கட்டுமான பொருளாக கருதப்படும் புரதச்சத்து, தசை வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் இன்றியமையாதது.
ஆனால், துரித உணவுகளின் ஆதிக்கம் மற்றும் சரிவிகித உணவு குறித்த போதிய புரிதல் இல்லாத காரணத்தால், நகர்ப்புற இந்தியர்களில் பெரும்பாலானோர் இந்த அடிப்படை ஊட்டச்சத்தை இழந்து நிற்கின்றனர். இது வெறும் தனிநபர் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையல்ல, இந்தியாவில் நீண்டகால மனித வளத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் ஒரு தீவிரமான சுகாதார நெருக்கடியாகும் என்கிறது ஆய்வு.
இந்த ஆய்வானது இந்தியாவின் 25 முக்கிய மெட்ரோ மற்றும் நகர்ப்புற மாவட்டங்களில் இருந்து 2.07 லட்சத்திற்கும் அதிகமான பதில்களை பெற்று தொகுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றவர்களில் 61 சதவீதம் பேர் ஆண்கள் மற்றும் 39 சதவீதம் பேர் பெண்கள்.
தினசரி உணவில் பற்றாக்குறை: 10 நகர்ப்புற இந்தியர்களில் 6 பேர் (60%) தங்களது தினசரி உணவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்வதில்லை. பருப்பு வகைகள், முட்டை, பால், பனீர், மீன் அல்லது நட்ஸ் வகைகள் (Nuts) போன்ற புரத மூலங்கள் 40 சதவீத மக்களின் தட்டில் மட்டுமே இடம்பிடிக்கின்றன.
விழிப்புணர்வு இல்லாமை: ஆய்வில் பங்கேற்றவர்களில் 74 சதவீதம் பேருக்கு ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு புரதச்சத்து தேவை என்ற அடிப்படை விவரமே தெரியவில்லை. மேலும், 85 சதவீதம் பேர் தாங்கள் உட்கொள்ளும் உணவில் எவ்வளவு புரதச்சத்து இருக்கிறது என்பதை ஒருபோதும் கணக்கிடுவதில்லை.
அறிகுறிகளைப் புறக்கணித்தல்: உடல் சோர்வு, தசை இழப்பு, முடி கொட்டுதல் மற்றும் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவை புரதச்சத்து குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள். ஆனால், 50 சதவீத நகர்ப்புற மக்கள் இந்த அறிகுறிகளுக்கும் புரதச்சத்திற்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்திருக்கவில்லை.
புரதச்சத்து குறைபாட்டிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ‘விலை’ (Affordability) என்பது ஒரு முக்கியமான தடையாக உருவெடுத்துள்ளது என்கிறது ஆய்வு. 71 சதவீத நுகர்வோர் மலிவான விலையில் புரதச்சத்து ஆதாரங்கள் கிடைத்தால் அவற்றிற்கு மாறத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். புரதச்சத்து நிறைந்த உணவுகள் சந்தையில் தாராளமாகக் கிடைத்தாலும், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு அவற்றின் விலை ஒரு சவாலாகவே உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.
இது தவிர, கலாச்சார உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் சுவை சார்ந்த விருப்பங்களும் புரத உட்கொள்ளலை குறைக்கின்றன. குறிப்பாக சைவ உணவுகளை உட்கொள்பவர்களிடம் இந்த பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது. பால் மற்றும் பருப்பு வகைகள் மட்டுமே இவர்களுக்கான பிரதான ஆதாரங்களாக இருப்பதால், அவற்றின் தேவை அதிகமாக உள்ளது.
மருத்துவ ரீதியான எச்சரிக்கை: இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், புரதச்சத்து குறைபாட்டை ஒரு உடற்பயிற்சி சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்காமல், அடிப்படை ஆரோக்கியத் தேவையாகப் பார்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். புரதச்சத்து குறைவதால் தசை வலிமை குறைந்து, வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் மூளைச் செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது ஆபத்தானது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) பரிந்துரையின்படி, ஒரு ஆரோக்கியமான இந்தியர் தனது உடல் எடையில் ஒவ்வொரு கிலோவிற்கும் 0.66 முதல் 0.83 கிராம் வரை புரதத்தை உட்கொள்ள வேண்டும். இந்த சுகாதார நெருக்கடியை குறைக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
மலிவான மற்றும் இயற்கையான புரதச்சத்து ஆதாரங்களை மக்களுக்குக் கொண்டு செல்வதே இந்த சுகாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்கிறது ஆய்வு.

