மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முடிவு தொடங்கிவிட்டது என தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் பேசியுள்ளார்.
அதிமுக – பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்காக, தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் இன்று (மார்ச் 23) சென்னை வந்தடைந்தார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களை பியூஸ் கோயல் சந்தித்து பேசினார். அப்போது அவர், ”தமிழ்நாட்டில் இன்று ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அரசு ஊழல் நிறைந்து திறமையற்ற அரசாங்கமாக உள்ளது. தமிழர்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழக பொருளாதாரத்தை இந்த அரசு தவறாக கையாண்டு வருகிறது. இவர்களின் செயல்பாடுகள் தமிழ் கலாச்சாரத்தை பெரிதும் பாதித்துள்ளன. தமிழக மக்கள் திமுக – காங்கிரஸ் கூட்டணியின் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இதனால் மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, பீகார் மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்ட அதே தோல்வி தான் தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பட போகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரே நோக்கம், வளர்ச்சி அடைந்த தமிழகத்தை உருவாக்குவது தான். அதற்காக விவசாயிகள், மீனவர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எங்களுடைய என்டிஏ கூட்டணி ஆட்சியில் சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும். இளைஞர்களுக்கு வாய்ப்புகள் புதிதாக உருவாக்கும் நோக்கத்தில், பல புதிய நிறுவனங்கள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ஏழைகளுக்கு தரமான கல்வி, மருத்துவம், வீடுகள் உறுதி செய்யப்படும். தமிழ் பண்பாடு மற்றும் தமிழர்களின் பெருமையை பாதுகாக்க இந்த என்டிஏ கூட்டணி உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தமிழ் மொழி, தமிழர்களின் பண்பாடு, தமிழர்களின் பெருமையை பேணி பாதுகாக்க இந்த கூட்டணி உறுதியாக உள்ளது. எங்களுடைய என்டிஏ கூட்டணி ஒற்றுமையாக ஒரு குடும்பம் போல் உள்ளது. தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவாக இருக்கிறது. இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையில் பாமக மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என கூறினார்.

