தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கிராம உள்ளாட்சித் தேர்தலையும் சேர்த்து நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர் சிவகுமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களின் கிராம உள்ளாட்சிக்கான பதவிக்காலம் 2025 ஜனவரியுடன் முடிவடைந்தது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான பதவிக்காலமும் விரைவில் நிறைவடைய உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் தங்கள் குறைகளையும் தேவைகளையும் அதிகாரிகளிடம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு 243 E-ன் படி, உள்ளாட்சி அமைப்புகள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே பதவியில் இருக்க முடியும். பதவிக்காலம் முடிவதற்கு முன் தேர்தலை கட்டாயமாக நடத்த வேண்டும் அல்லது 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
எந்த காரணத்திற்காகவும் தேர்தலை நிறுத்தி வைக்காமல், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய அரசியலமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-க்கான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. அதனால், சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து உள்ளாட்சி தேர்தலையும் நடத்தினால் நிர்வாக ரீதியான எந்த பிரச்சனையும் ஏற்படாது.
இந்த நேரத்தில் தேர்தலை நடத்தினால், தேர்தல் செலவு மிச்சமாகும். மீண்டும் தேர்தலுக்காக அதிகாரிகளை தனியாக நியமிக்க வேண்டாம். மக்கள் நலப்பணிகளும் பாதிக்கப்படாது. நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்த ஏற்கனவே இந்திய அரசு ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்பதையும் வலியுறுத்தி வருகிறது. அதை செயல்படுத்தத் தமிழக அரசுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்புக்கு பின் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதித்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

