திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
புதிய ஆட்சியர் அலுவலகம்
திருப்பத்தூரில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இன்று அதன் திறப்பு விழாவையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவிழா கோலத்தில் காட்சியளித்தது.

முதலமைச்சர் வருகை
அதனையடுத்து இன்று காலை புதிதாக கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் ரிப்பன் வெட்டி ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதனைத்தொடர்ந்து புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றை நட்டார். முதலமைச்சர் வருகையால் அந்த பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர்.
நலத்திட்ட உதவிகள்
பின்பு நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘நீண்ட வரலாறும், பெருமையும் கொண்டது திருப்பத்தூர். 1,500 ஆண்டு பழமையான சோழ, விஜயநகர, ஹாய் சாய்கள் ஆண்ட பகுதி திருப்பத்தூர். இந்த மாவட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு வருடத்தில் 1,703 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 20,518 பேரின் கூட்டுறவு நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சம் பேர் ‘மக்களை தேடி மருத்துவம்’ மூலம் பயன்படுத்துள்ளார்கள்.

ஸ்டாலின் உரை
தமிழகத்தை முன்னேற்ற என் சக்தியை மீறி செயல்பட்டு வருகிறேன். எனது உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் உழைக்கிறேன். மக்களின் முகத்தை பார்த்தால் மாத்திரைகளே தேவையில்லை. நான் மட்டும் அல்ல அமைச்சர்கள், அதிகாரிகள் என்று அனைவரும் தனது சக்தியை மீறி உழைத்து வருகிறார்கள். இதனால் இந்தியாவிற்கு முன்மாதிரியான ஆட்சியாக திராவிட ஆட்சி செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

