கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே, ரயில்வே விரிவாக்கப் பணிக்காக 200 ஆண்டுகள் பழமையான தேவாலயம் அடியோடு பெயர்த்து எடுக்கப்பட்டு, பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்படுகிறது.
எர்ணாகுளம் அருகே உள்ள கோந்துருத்தி நகரில் புனித நெப்போமுசன் தேவாலயத்தின் கீழ் கடந்த 1823-ல் பிரதான தேவாலயத்துடன் இந்த சிறு தேவாலயமும் கட்டப்பட்டது. போர்ச்சுகீசிய கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வகையில், இந்த சிறு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரதான தேவாலயம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் கடந்த 1992-ல் புதிய தேவாலயம் கட்டப்பட்டது. ஆனால் காலங்காலமாக பொதுமக்கள் வழிபட்டு வரும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த சிறு தேவாலயம் இடிக்கப்படவில்லை.
அண்மையில், ரயில்வே விரிவாக்கப் பணிக்காக, ரயில்வே துறை நிலம் கையகப்படுத்திய போது, சிறு தேவாலயத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இடத்தில் மேலும் ஒரு தண்டவாளம் அமைக்கப்பட உள்ளது.
இதையடுத்து, உள்ளூர் மக்கள் கூடி கலந்தாலோசித்து, பழமை வாய்ந்த தேவாலயத்தை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து, இடிக்காமல், அதனை அடியோடு வேறு இடத்திற்கு பெயர்த்துக் கொண்டு போக முடிவு செய்தனர்.
அதன்படி, பழமையான தேவாலயத்திற்கு எந்தவித சேதாரமும் ஏற்படாமல், அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டு 26 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இடத்தில் வைக்கப்படுகிறது.
இந்த தேவாலயத்தை இடமாற்றம் செய்யும் பணியை, இந்த துறையில் அனுபவம் வாய்ந்த ஹரியானாவை சேர்ந்த ஶ்ரீராம் பில்டிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம், கட்டடடங்களை உயர்த்தும் வேலையையும், வேறு இடத்திற்கு மாற்றும் வேலையையும் கடந்த 1973-ம் ஆண்டில் இருந்து செய்து வருகிறது.
செங்கல் பாறைகளையும் மண்ணையும் கொண்டு இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளதால் அதன் அடித்தளம் வலுவாக இல்லை. இதனால், சிறு சேதாரம் ஏற்படமால் தேவாலயத்தை அடியோடு பெயர்த்து எடுப்பது சவாலான பணியாக இருந்தது. இருப்பினும் அந்த நிறுவனத்தின் குழுவினர், 9 நாள்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டு தேவாலயத்தை உயர்த்தியுள்ளனர். தற்போது அந்த தேவாலயம், புதிய இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த தேவாலயத்தை வரும் குருத்தோலை ஞாயிறுக்கு (மார்ச் 29) முன்பாக புதிய இடத்தில் வைக்க தேவாலய நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொச்சி மாநகராட்சி அனுமதி அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த தேவாலயம், நகர்ப்புற வளர்ச்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல், தனது வரலாற்று பெருமையுடன் புதிய இடத்தில் வருங்கால தலைமுறையினருக்கு சான்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

