ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி நகரும்போது, நாம் உண்ணும் உணவின் சத்துக்களை எப்படி முழுமையாக பெறுவது என்பது மிக முக்கியம். பொதுவாக நாம் பருப்பு மற்றும் தானியங்களை அப்படியே சமைத்து உண்பதை விட, அவற்றை ‘முளைகட்ட’ வைத்து உண்பது அதன் சத்துக்களை பல மடங்கு அதிகரிக்கிறது.
முளைகட்டுதல் என்பது ஒரு எளிய இயற்கை செயல்முறை. இது தானியங்களில் உள்ள என்சைம்களைத் தூண்டி, செரிமானத்திற்கு தடையாக இருக்கும் ‘பைடிக் அமிலம்’ போன்ற கூறுகளை நீக்குகிறது. இதனால் சாதாரண தானியங்கள் ஒரு ‘சூப்பர் ஃபுட்’ ஆக மாறுகின்றன.
குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புவோர், புரத சத்தை இயற்கையாக அதிகரிக்க நினைப்போர் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு முளைகட்டிய தானியங்கள் ஒரு சிறந்த தீர்வாகும். பச்சைப்பயறு, கருப்புச் சுண்டல் தாண்டி இன்னும் பல உணவுகளை முளைகட்டி உண்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
பச்சைப்பயறு: பச்சைப்பயறு முளைகட்டிய தானியங்களில் மிகவும் முதன்மையானது. முளைகட்டிய பச்சைப்பயறில் வைட்டமின் சி சத்து, சாதாரண பயறை விட 20 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்குகிறது.
மேலும், இது உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு வேளை உணவாகவே எடுத்து கொள்ளலாம். இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
சுண்டல்: வெள்ளை அல்லது கருப்பு சுண்டலை முளைகட்ட வைப்பதன் மூலம் புரதம், நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் போன்ற பி-வைட்டமின்கள் அதிகரிக்கின்றன. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.
சுண்டலை முளைகட்டி சாப்பிடும் போது, அது சாதாரண சுண்டலை விட எளிதில் ஜீரணமாகும் தன்மை பெறுகிறது. இது இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கவும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் வழிவகுக்கிறது. இதனை சாலட் அல்லது ஹம்முஸ் போன்ற உணவுகளில் சேர்த்துசாப்பிடலாம்.
ராகி: ராகி அல்லது கேழ்வரகு இயற்கையிலேயே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறுதானியம். இதனை முளைகட்ட வைக்கும் போது, அதில் உள்ள கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களை நம் உடல் எளிதில் உறிஞ்சிக் கொள்ளும் நிலைக்கு மாறுகிறது.
ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். ராகி முளைகட்டும் போது அதில் உள்ள அமினோ அமிலங்களின் அளவு அதிகரிக்கிறது. இது பசையம் அற்றது (Gluten-free) என்பதால் செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கும், கைக்குழந்தைகளுக்கும் கஞ்சியாகச் செய்து கொடுப்பது உடல் வலிமையை இரட்டிப்பாக்கும்.
குயினோவா: தற்போது பிரபலமாகி வரும் குயினோவாவை முளைகட்டும் போது அதன் புரத அளவு மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்களின் அளவு பலமடங்கு கூடுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மற்றும் நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும். இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, இன்சுலின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. இதனை காய்கறிகளுடன் சேர்த்து சாலட் போல உண்பது உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கும்.
பருப்பு வகைகள்: நமது அன்றாட உணவில் பயன்படுத்தும் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு போன்ற அனைத்து பருப்புகளையும் முளைகட்டலாம். முளைகட்டிய பருப்புகளில் வைட்டமின் பி6, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
இவை செரிமானத்தை எளிதாக்குவது மட்டுமின்றி, ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மையையும் கொண்டவை. பருப்புகளை முளைகட்டிச் சமைக்கும் போது அதன் சுவை அதிகரிப்பதோடு, வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளும் ஏற்படாது. இதனைச் சூப் அல்லது கூட்டுகளில் சேர்த்துப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது.
வெள்ளை பட்டாணி: முளைகட்டிய வெள்ளை பட்டாணியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் உறுதிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்வதில் வெள்ளை பட்டாணி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனை சாலட்கள் அல்லது லேசாக வதக்கி சிற்றுண்டியாக சாப்பிடுவது இதயம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு பலன் தரும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கக் கூடியது.
கொள்ளு: பக்வீட் அல்லது சில வகை தானியங்களை முளைகட்டும் போது அதில் மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் செறிவாகக் கிடைக்கின்றன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. இதனைச் சாலட்கள், ஸ்மூத்திகள் அல்லது கஞ்சியாக செய்து சாப்பிடலாம். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செல்களைப் புதுப்பிக்க உதவுகின்றன.
நிலக்கடலை: நிலக்கடலையை முளைகட்ட வைப்பதன் மூலம் அதில் உள்ள புரதம் மற்றும் நியாசின், ஃபோலேட் போன்ற வைட்டமின்கள் அதிகரிக்கின்றன. பொதுவாக நிலக்கடலையில் உள்ள கொழுப்பைக் கண்டு அஞ்சுபவர்கள், அதனை முளைகட்டிச் சாப்பிடும் போது அது ஆரோக்கியமான கொழுப்பாக மாறுகிறது. இது இதயத்திற்கு வலிமை சேர்ப்பதோடு, தோலுக்கும் பளபளப்பைக் கொடுக்கிறது. இதனை மாலை நேரச் சிற்றுண்டியாகவோ அல்லது சாலட்களிலோ சேர்த்துச் சாப்பிடலாம்.

