இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நடப்பு சீசனுக்கான ஒளிபரப்பு உரிமத்தை ரூ.8.62 கோடி என்ற தொகையில் ஃபேன்கோட் செயலி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க ஐபிஎல் இருப்பது போல், கால்பந்து விளையாட்டின் ரசிகர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் இந்திய சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டிகள் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 11 சீசன்கள் நடைபெற்ற நிலையில், அதிகபட்சமாக கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட ஏடிகே அணி மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இது தவிர சென்னையின் எஃப்.சி. மற்றும் மோகன் பாகன், மும்பை சிட்டி எஃப்.சி. அணிகளும் தலா 2 முறை கோப்பையை வென்றுள்ளன.
இதனால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்புகளும், ஆர்வமும் ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனிடையே ஐஎஸ்எல் தொடரில் ஏற்பட்ட நிர்வாக சிக்கல், நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் 2025-26ஆம் ஆண்டிற்கான சீசன் நடைபெறுவதில் பிரச்சினை ஏற்பட்டது.
ஆனால் அவை சரி செய்யப்பட்டு 2025-26 ஆம் ஆண்டிற்கான ஐ.எஸ்.எல் சீசனானது வரும் 14 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், இந்த தொடரில் மோகன் பாகன், ஈஸ்ட் பெங்கால், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எஃப்.சி., சென்னையின் எஃப்.சி. உள்ளிட்ட மொத்தம் 14 அணிகள் பங்கேற்கும் என்றும், இதில் மொத்தமாக 91 போட்டிகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியன் சூப்பர் லீக் தொடரின் இந்த சீசனுக்கான ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் ஜியோ மற்றும் ஃபேன்கோட் செயலிகள் கடும் போட்டியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியில் ஃபேன்கோட் செயலி ரூ.8.62 கோடிக்கு இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஒளிபரப்பு உரிமையை வென்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது முந்தைய சீசனை விட 95 விழுக்காடு குறைவான தொகையாகும். ஏனெனில் கடந்த 2024-25ஆம் ஆண்டிற்கான ஐ.எஸ்.எல் தொடரின் ஒளிபரப்பு உரிமம் ரூ.275 கோடியாக இருந்த நிலையில், தற்சமயம் வெறும் ரூ.8.62 கோடிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது ஒட்டுமொத்த தொடரின் சந்தை மதிப்பையும் குறைத்துள்ளது.
ஏனெனில் கடந்த சீசனில், ஐஎஸ்எல்லின் ஒளிபரப்பு ஒப்பந்தம் 163 போட்டிகளுக்கு ரூ.275 கோடி மதிப்புடையது. அதாவது ஒரு போட்டிக்கு சுமார் ரூ.1.68 கோடியாக இருந்தது. ஆனால், இந்த சீசனில், ஃபேன்கோட் செயலி 91 போட்டிகளுக்கு ரூ.8.62 கோடிக்கு ஏலத்தை வென்றது. அதாவது ஒரு போட்டிக்கு சுமார் ரூ.9.5 லட்சம் என்ற அடிப்படையில் அவர்கள் இந்த ஏலத்தை எடுத்துள்ளனர்.
இது குறித்து பேசிய அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலாளர் எம்.சத்தியநாரயணன், “ஐஎஸ்எல் தொடரின் ஊடக உரிமைகள் செயல்முறையை முடித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் முன்னணி விளையாட்டு தளங்களில் ஒன்றான ஃபேன்கோடுடன் கூட்டு சேர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் மோகன் பாகன் அணி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

