போலீஸ் கதாபாத்திரத்தை வைத்து நான் படம் எடுத்தால் நிச்சயம் பிரச்சினை வரும் என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ள ’காளிதாஸ் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர்கள் பரத், சாந்தனு பாக்யராஜ், கலையரசன், இப்படத்தின் இயக்குநர் ஸ்ரீ செந்தில், இயக்குநர்கள் பா. ரஞ்சித், பாண்டியராஜ், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் சாந்தனு பேசுகையில், “நடிகர் பரத்தின் திரைப்பயணத்தில் காதல், எம்டன் மகன், வெயில் போன்ற திரைப்படங்கள் வரிசைகள் நிச்சயம் ’காளிதாஸ் 2’ திரைப்படம் இடம்பெறும்” என்றார்.
’காளிதாஸ் 2’ பட நாயகன் நடிகர் பரத் பேசுகையில், “என்னை பார்க்கும் பெரும்பாலானோர், நான் 11வது படிக்கும் போது ’பாய்ஸ்’ படம் பார்த்தேன் என சொல்வார்கள். நானே 11வது படிக்கும் போது தான் அந்த படத்தில் நடித்தேன். என்னை ஏதோ மூத்த நடிகர் போல் சித்தரிக்கின்றனர். ஆனால் நானும் இளமையானவன் தான். ’காளிதாஸ்’ முதல் பாகம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. அந்த தருணத்திலேயே அந்த இயக்குநருடன் மீண்டும் பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். இருந்தபோதிலும், கரோனா காலகட்டம் என்பதால் அது சற்று தள்ளிப்போனது.
கடந்த 23 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் எனக்கான அங்கீகாரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில், இந்த திரைப்படம் அதை நிச்சயமாக பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கிறேன். பெரிய தயாரிப்பாளர் இருந்தால்தான் இசை வெளியீட்டு விழாவே பிரமாண்டமாக நடைபெறும். அந்த வகையில், இந்த திரைப்படம் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
முந்தைய படத்தின் வெற்றிதான் அடுத்த படத்திற்கான சம்பளமாக அமைகிறது. அந்த வகையில், இந்த திரைப்படமானது வெற்றிகரமாக அமையும் என நம்புகிறேன். படத்தைப் பார்த்த இயக்குநர்கள் அனைவரும் சொன்னது போல இப்படத்தில் பல்வேறு திருப்பங்கள் உள்ளன” என பேசினார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “நான் இந்த படம் பார்த்துவிட்டேன். மூன்று பெண் கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். சிறப்பாக பணியாற்றியுள்ளார். நேற்று வெளியான சிறிய திரைப்படமான ’யூத்’ நல்ல வோரவேற்பினை பெற்றுள்ளது. மேலும், இந்த ஆண்டு என்னுடைய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின்றன. நேற்று கூட, திரையரங்குகளில் ’சிறை’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
தொடர்ந்து, ‘சிறை’ திரைப்படம் போல நல்ல காவலர்களை வைத்து நீங்கள் திரைப்படம் இயக்குவீர்களா என தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய போது, ”போலீஸ் கதாபாத்திரத்தை வைத்து நான் படம் எடுத்தால் நிச்சயம் பிரச்சனை வரும். ஏனெனில், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருந்தே எனது சிந்தனை தோன்றும். நல்ல காவலர்களும் இருக்கிறார்கள். இருந்தபோதிலும், இன்றைக்கும் காவல் நிலையம் உள்ளே சென்று வருவதற்குள் நமக்கு பல்வேறு விதமான பயம் ஏற்படுகிறது” என கூறினார்.
இதையும் படிங்க: நீண்ட காத்திருப்பிற்கு பின் வெளியாகும் ’எல்.ஐ.கே’ – ’ஜென் சி’ ரசிகர்கள் மகிழ்ச்சி
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசுகையில், “எனக்கு இந்த படத்திற்கு இசையமைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடந்த வருடம் ’பார்க்கிங்’ திரைப்படத்தில் பணியாற்றினேன். அந்த படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. பெரிய பட்ஜெட், பெரிய சம்பளம் எதுவும் பார்க்காமல் பெரிய கன்டென்ட் உள்ள படங்களில் நான் பணியாற்ற வேண்டும் என நினைக்கிறேன். முன்பெல்லாம், பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் படங்களை பார்க்க ரசிகர்கள் செல்வார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறு. சிறிய பட்ஜெட் கொண்ட நல்ல படம் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்” என்றார்.

